மேற்கிந்திய தீவுகள் அணி சுற்றுப்பயணம்
வரும் ஜூலை 8ம் தேதி முதல் இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது. இதற்கென கடந்த வாரத்தில் இங்கிலாந்தின் மான்செஸ்டருக்கு சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 14 நாட்கள் தனித்திருத்தலில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து பயிற்சி ஆட்டங்களிலும் பங்கேற்று ஆடவுள்ள அவர்கள், டெஸ்ட் போட்டியில் மோதவுள்ளனர்.
'நோ' அன்பான வரவேற்பு
இந்நிலையில் பார்படோசில் பிறந்து தற்போது இங்கிலாந்து அணிக்காக விளையாடிவரும் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், மேற்கிந்திய தீவுகள் அணியிலிருந்து அன்பான வரவேற்பை எதிர்பார்க்க வேண்டாம் என்று அந்த அணியின் பௌலர் கெமர் ரோச் தெரிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகளில் பிறந்து அந்த அணிக்காக அன்டர் 19 போட்டிகளில் ஆர்ச்சர் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எந்த நட்பையும் எதிர்பார்க்க வேண்டாம்
ஆர்ச்சரின் தந்தை இங்கிலாந்தில் பிறந்தவர் என்பதால், கடந்த ஆண்டிலிருந்து இங்கிலாந்து அணிக்காக ஆர்ச்சர் விளையாடி வருகிறார். இந்நிலையில் தற்போது இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளின் டெஸ்ட் தொடரில் முதல்முறையாக அவர் களமிறங்கி விளையாட உள்ளார். ஆன்லைன் மூலம் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கெமர் ரோச், இந்த தொடரின் போது எந்தவித நட்பையும் ஆர்ச்சர் எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
வெற்றியே ஒரே நோக்கம்
இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் விளையாடிய கடந்த தொடரில் 2க்கு ஒன்று என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியை தொடர தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி முனைப்புடன் உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்று வெற்றி பெறுவதே மேற்கிந்திய தீவுகளின் ஒரே நோக்கம் என்றும் ஆர்ச்சரின் பந்துகளை அணிவீரர்கள் தீவிரமாக எதிர்கொள்வார்கள் என்றும் ரோச் கூறியுள்ளார்.
வெற்றிக்கான சாத்தியம்
கடந்த சில ஆண்டுகளாக தங்களது பௌலர்கள் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள ரோச், இந்த தொடரிலும் அது வெளிப்படும் என்று தெரிவித்துள்ளார். கடந்த தொடரில் இங்கிலாந்தை வெற்றி கொண்ட நிகழ்வு பசுமையாக நினைவில் உள்ளதாகவும் பேட்ஸ்மேன்களை விரைவிலேயே சுருட்ட முடிந்தால், அதன்மூலம் வெற்றி சாத்தியப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.