இந்தூர்: இந்தியா, நியூசிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 557 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
கேப்டன் விராத் கோஹ்லி அபாரமாக ஆடி இரட்டை சதம் போட்டார். 211 ரன்கள் எடுத்த நிலையில் அவர் அவுட்டாகிய நிலையில் அஜிங்கியா ரஹானே 188 ரன்களில் அவுட்டானார். ரோஹித் சர்மா 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. விக்கெட் இழப்பில்லாமல் 15 ரன்களை அது எடுத்துள்ளது.
முன்னதாக விராத் கோஹ்லியும், ரஹானேவும் இணைந்து அதிரடியாக ஆடி இந்தியாவின் நிலையை வலுப்படுத்தினர். கோஹ்லி விடை பெற்று விட்ட நிலையில் ரஹானே மீது அனைவரின் கவனமும் திரும்பியது. அஜிங்கியா ரஹானே 188 ரன்களுடன் இரட்டை சதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார். இதுவரை அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்ததில்லை. இன்று நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் 188 ரன்களில் ஆட்டமிழந்தார்.
விராத் கோஹ்லி 347 பந்துகளைச் சந்தித்து 18 பவுண்டரிகளுடன் தனது இரட்டை சதத்தைப் போட்டார். அவர் இரட்டை சதம் போட்டதும் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பியதால் மைதானமே அதிர்ந்தது. கோஹ்லிக்கு இது டெஸ்ட் போட்டியில் 2வது இரட்டை சதமாகும்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் 10, கம்பீர் 29 ரன்களில் ஆட்டமிழந்தனர். சட்டேஸ்வர் புஜாராவின் பங்கு 41 ஆக அமைந்தது. இந்த நிலையில் கோஹ்லியும், ரஹானேவும் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் நிதானமாகவும், அதேசமயம், வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அதிரடியைக் காட்டியும் சிறப்பாக பேட் செய்தனர். இதனால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
ரஹானே அழகான சதம் அடித்தார்.முன்னதாக இன்று காலை இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் என்ற நிலையில் ஆட்டத்தைத் தொடர்ந்தது. கோஹ்லியும், ரஹானேவும் இணைந்து ஸ்கோரை 400 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றனர்.