பகலிரவு டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் நாளை அகமதாபாத்தின் மோதேரா மைதானத்தில் 3வது மற்றும் பகலிரவு டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெறவுள்ளது. பகலிரவு போட்டி குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு சிறப்பாக அமையும் என்று கூறப்படும் நிலையில் அதுகுறித்தெல்லாம் தான் கவலை கொள்ளவில்லை என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
சிறப்பான பௌலர்கள்
பகலிரவு போட்டி எந்தவகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தெல்லாம் தான் கவலை கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள விராட் கோலி, ஆனால் எந்தவகையான சூழலையும் சமாளிக்கும்வகையில் இந்திய அணியில் சிறப்பான பௌலர்கள் உள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
சூழ்நிலையே தீர்மானிக்கும்
இங்கிலாந்து அணியின் வலிமை மற்றும் பலவீனம் குறித்தும் தான் எதையும் யோசிக்கவில்லை என்றும் கோலி கூறியுள்ளார். கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பகலிரவு போட்டியில் 36 ரன்களில் இந்திய அணி சுருண்டதை நினைவு கூர்ந்த விராட் கோலி, அந்த நேரத்தின் சூழ்நிலையே அத்தகைய போட்டிகளை நிர்ணயிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்தும் இதே கருத்தை கூறும்
இங்கிலாந்து அணியிடம் கேட்டாலும் அவர்களும் இத்தகைய கருத்தையே கூறுவார்கள் என்றும் விராட் கோலி தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் நிலைமை நமது கட்டுப்பாட்டை மீறி சென்றுவிடும் என்றும் கூறியுள்ளார். கடந்த 2018ல் நியூசிலாந்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 58 ரன்களில் சுருண்டது குறிப்பிடத்தக்கது.