9வது ஐபிஎல் தொடர்
9வது ஐபிஎல் தொடர் ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனான மும்பை இந்தியன்ஸும், புனே அணியும் மோதவுள்ளன.
மும்பை - புனே -நாக்பூர்
மகாராஷ்டிராவில் மும்பை, புனே, நாக்பூர் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இங்கு மொத்தம் 19 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் பெரும் வறட்சி நிலவுவதால் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
70 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை
மும்பை, புனே, நாக்பூரில் போட்டிகளை நடத்தும் நாட்களில் உத்தேசமாக 70 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுதான் பலரையும் டென்ஷனாக்கியுள்ளது.
இது தேவையா?
தற்போதைய வறட்சியான நிலையில் 70 லட்சம் லிட்டர் தண்ணீரை யாருக்குமே பலன் தராத விளையாட்டுப் போட்டிக்காக வீணடிப்பது தேவையற்றது என்று மகாராஷ்டிர மாநில பாஜக செயலாளர் விவேகானந்த குப்தா சாடியுள்ளார்.
வேறு இடத்திற்கு மாற்றுங்கள்
இதுகுறித்து அவர் கூறுகையில், ஐபிஎல் போட்டிகளை மகாராஷ்டிராவில் நடத்தக் கூடாது. வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று அவர் பிசிசிஐ தலைவர் சஷாங் மனோகருக்கு கடிதம் எழுதியுள்ளார்..
90 லட்சம் விவசாயிகள் பாதிப்பு
இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு நாளைக்கு மைதானங்களுக்கு உத்தேசமாக 1லட்சம் லிட்டர் தண்ணீர் வரை தேவைப்படும். தற்போது மகாராஷ்டிரா உள்ள நிலையில் இவ்வளவு தண்ணீரை வீணடிப்பது தேவையற்ற வேலை. விதர்பா பகுதியில் விவசாயிகள் மிகப் பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளனர். 90 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு சொட்டும் முக்கியம்
விவசாயிகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். அவர்களைக் காக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அவர்களது வாழ்க்கை பெரும் போராட்டமாக உள்ளது. இந்த நேரத்தில் ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் முக்கியமானது.
உங்களுக்குத் தெரியாததா
நீங்களே (மனோகர்) விதர்பாவைச் சேர்ந்தவர்தான். உங்களுக்குத் தெரியாதது இல்லை. எனவே நிலைமையின் ஆழம் உங்களுக்குப் புரியும். அதை உணர்ந்து போட்டிகளை வேறு மாநிலங்களுக்கு மாற்ற முன்வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.