டெல்லி: டெல்லி பாலம் விமானப் படை மைதானத்தில் டெல்லி, உத்தர பிரதேசம் இடையே ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தபோது, மைதானத்துக்குள் திடீரென ஒரு கார் வந்தது.
காரை ஓட்டி வந்தவரைப் பிடித்து போலீசார் செமயாக கவனித்தபோது, அவர் சொன்ன காரணம்தான் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக கான்பூரில் நடந்த ஒருதினப் போட்டியின்போது, கேப்டன் விராட் கோஹ்லி சதமடித்தபோது, ஒரு ரசிகர் மைதானத்துக்குள் நுழைந்து, அவருக்கு பாராட்டு தெரிவிக்க முயன்றார். நிர்வாணமாக ரசிகர்கள் மைதானத்துக்குள் நுழைவதெல்லாம், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் சர்வ சகஜம்.
ஆனால், இதுவரை யாருமே செய்யாத ஒன்றை, டெல்லியைச் சேர்ந்த கிரிஷ் சர்மா செய்துள்ளார். சாப்ட்வேர் இன்ஜினியரான அவர், டெல்லி, உத்தர பிரதேசம் ரஞ்சி கோப்பை போட்டியின் போது, மைதானத்துக்குள் காரில் சென்றுள்ளார். விளையாடிக் கொண்டிருந்த சுரேஷ் ரெய்னா, கவுதம் கம்பீர், இஷாந்த் சர்மா, ரிஷப் பந்த் போன்ற இந்திய அணிக்காக விளையாடியுள்ள வீரர்களும், மற்ற வீரர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
பிட்ச் வரை சென்று, அங்கு ஒரு எட்டு போட்டுவிட்டு, காரை நிறுத்தியுள்ளார். அதன்பிறகே, பாதுகாப்பு வீரர்கள் வந்து, அவரை மைதானத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். போலீசார் நடத்திய விசாரணையின்போது அவர் கூறியதுதான் ஹைலைட்.
இந்தப் பக்கமாக வந்தேன். கிரிக்கெட் போட்டி நடப்பதாக கூறினார்கள். அதான் பார்க்கலாம் என்று வந்தேன். ஆனால் காரை எங்கு பார்க்கிங் செய்ய வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. அதான் உள்ளே சென்றுவிட்டேன். வீரர்களை பார்த்த மாதிரியும் ஆச்சு என்று கூலாக கிரிஷ் கூறியுள்ளார். மேலும் ஒரு பப்ளிசிட்டிக்காக இவ்வாறு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.