மனோஜ் திவாரி விரக்தி
மனோஜ் திவாரி ஐபிஎல் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான வீரர். எனினும், அவரை 2018 ஐபிஎல் தொடர் முதல் யாரும் ஐபிஎல் அணிகளில் தேர்வு செய்வதில்லை. இது குறித்து அவர் தன் விரக்தியை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார்.
2020 ஐபிஎல் ஏலம்
சமீபத்தில் நடந்து முடிந்த 2020 ஐபிஎல் ஏலத்தில் கூட மனோஜ் திவாரி பெயர் ஏலத்தில் வந்த போது எட்டு ஐபிஎல் அணிகளும் மௌனம் காத்தன. எந்த அணியும் அவரை வாங்க முற்படவில்லை. அதனால், மீண்டும் விரக்தியில் இருந்தார் மனோஜ் திவாரி.
பார்வையிட வந்தார்
இந்த நிலையில் தான் பெங்கால் அணிக்காக ரஞ்சி தொடரில் ஆடி வந்தார் மனோஜ் திவாரி. ஆந்திரா அணிக்கு எதிராக பெங்கால் அணி ஆடிய போட்டியைக் காண இந்திய அணி தேர்வுக் குழு உறுப்பினர் தேவாங் காந்தி நேரில் வந்தார்.
அறைக்கு சென்றார்
போட்டியை பார்வையாளர் பகுதியில் அமர்ந்து பார்த்த அவர், இடையே பெங்கால் அணியின் உடை மாற்றும் அறைக்கு சென்றார். அப்போது கிரிக்கெட்டில் நடைமுறையில் இருக்கும் ஊழல் தடுப்பு விதிகள்படி வெளிநபர்கள் வீரர்கள் உடை மாற்றும் அறைக்குள் செல்லக் கூடாது.
புகார்
தேவாங் காந்தி தேர்வுக் குழு உறுப்பினர் என்பதால் யாரும் இந்த விதியை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், மனோஜ் திவாரி இது குறித்து ஊழல் தடுப்பு அதிகாரியிடம் புகார் அளித்தார்.
அதிகாரி வெளியேற்றினார்
ஊழல் தடுப்பு அதிகாரி உடனடியாக தேவாங் காந்தியை வீரர்கள் அறையில் இருந்து வெளியேற்றினார். இந்த சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது. மனோஜ் திவாரி ஏன் இப்படி செய்தார் என்பது பற்றி பல வகையாக பேசப்பட்டு வருகிறது.
ஏன் இப்படி செய்தார்?
இந்திய அணி, ஐபிஎல் என எங்கேயும் இடம் இல்லாத நிலையில் விரக்தியில் இருக்கும் மனோஜ் திவாரி, இனி எப்படியும் தம்மை எந்த அணியிலும் தேர்வு செய்ய மாட்டார்கள் என்ற முடிவில் இவ்வாறு தேர்வுக் குழு உறுப்பினர் மீது புகார் அளித்து அவரை அவமானப்படுத்தி இருக்கலாம் என்ற ஒரு கருத்தும் உள்ளது.
விளக்கம்
எனினும், தேவாங் காந்தி ஊழல் தடுப்பு அதிகாரியின் ஒப்புதலை அடுத்து தான் வீரர்கள் அறைக்குள் சென்றதாக கூறி இருக்கிறார். தான் ஏன் அங்கே சென்றேன் என்பது பற்றியும் விளக்கம் அளித்துள்ளார்.
முதுகு வலி
தேவாங் காந்தி, "எனக்கு முதுகு வலி உள்ளது. பெங்கால் அணி பயிற்சியாளர் அருண் லால் என்னை உடை மாற்றும் அறைக்கு வந்து, அங்கே பிசியோதெரபிஸ்ட்டிடம் ஆலோசனை பெறுமாறு கூறினார்" என்றார்.
சம்மதம் பெற்றேன்
மேலும், "நான் ஊழல் தடுப்பு அதிகாரியின் சம்மதம் பெற்ற பின்னரே அறைக்குள் சென்றேன். அங்கே இருந்து பிசியோதெரபிஸ்டுடன் பெங்கால் அணி மருத்துவ அறைக்கு சென்றேன்" என தெரிவித்தார் தேவாங் காந்தி.