முளைச்சு மூணு இலை விடலை.. அதுக்குள்ள ஈகோ!! இளம் வீராங்கனையின் பேச்சால் எரிச்சலான மேரி கோம்!
டெல்லி : உலகின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம் இந்தியா ஓபன் குத்துச்சண்டை தொடரில் பங்கேற்று வருகிறார்.
இந்த தொடரில் அவரை எதிர்த்து சண்டையிட்ட நிகாட் ஜரீன் என்ற இளம் வீராங்கனை போட்டிக்கு முன் அளித்த பேட்டி தனக்கு எரிச்சல் ஊட்டியது என மேரி கோம் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஓபன் தொடரின் 51 கிலோ எடைப் பிரிவில் மேரி கோம் - நிகாட் ஜரீன் இடையே ஆன போட்டி கடந்த வியாழன் அன்று நடைபெற்றது. அந்தப் போட்டிக்கு முன்பு, பேட்டி அளித்த நிகாட் ஜரீன், "மேரி கோம் தனது ரோல் மாடல்" என்று குறிப்பிட்டு கூறிவிட்டு, பின்னர் தனது மூளையை பயன்படுத்தி அவரை வீழ்த்துவேன் என்பது போன்ற கருத்துக்களை கூறி இருந்தார்.
ஆனால், போட்டியில் ஜரீனை எளிதாக வீழ்த்திய மேரி கோம், போட்டிக்கு முன் ஜரீன் அளித்த பேட்டி கடும் எரிச்சலை உண்டாக்கியதாக கூறினார்.
முதலில் மேடையில் தன்னை நிரூபிக்க வேண்டும். அவர் சர்வதேச அளவில் ஒரு பதக்கம் தான் வென்றுள்ளார். அதற்குள் அவருக்கு ஈகோ வந்துவிட்டது. அதற்குள் அவர்கள் பெருமை கொள்கிறார்கள். இது கெட்ட பழக்கம் என அவரை வெளுத்து வாங்கினார் மேரி கோம்.
நான் இந்த நாட்டுக்காக எத்தனை ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன்? எத்தனை முறை என்னை நிரூபித்திருக்கிறேன்? அவர்கள் என்னுடன் ஆடுவதே அதிர்ஷ்டம். அவர்களுக்கு நிறைய அனுபவம் கிடைக்கும் என்றும் கூறினார் மேரி கோம். நிகாட் ஜரீன் உலக ஜூனியர் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications