டெல்லி: இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று தந்த, டைவ் அடித்து பீல்டிங் செய்வதில் கில்லாடி என்ற பெயர் பெற்ற 37 வயதாகும் முகம்மது கைப், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 13 டெஸ்ட்கள் மற்றும் 125 ஒருதினப் போட்டிகள், முதல் தரப் போட்டிகள் என அனைத்தையும் சேர்த்து, 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரன்களை குவித்தவர் முகம்மது கைப்.
2000ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர். 2002ல் நாட்வெஸ்ட் கோப்பையை வெல்வதற்கு மிகப் பெரிய பலமாக இருந்தவர் கைப். அந்தப் போட்டியில் 87 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு கோப்பையை வென்றுத் தந்தார்.
நாட்வெஸ்ட் கோப்பையை வென்று 16 ஆண்டுகளாகி உள்ள நிலையில், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறுவதாக கைப் அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், ஆந்திரா, சத்தீஸ்கருக்காகவும் அவர் விளையாடியுள்ளார். கடைசியாக 2006ல் இந்திய அணிக்காக விளையாடிய அவர், ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.
அதிரடி நடுவரிசை பேட்ஸ்மேனாக விளங்கிய அவர், மிகச் சிறந்த பீல்டர்களில் ஒருவர். தென்னாப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ் போன்று மைதானத்தில் டைவ் அடித்து பந்துகளை தடுத்து நிறுத்தி புகழ் பெற்றவர் கைப்.