ரஞ்சியில் ஆட வேண்டாம்
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அங்கே நடந்து வரும் டி20 தொடர் இந்த வார இறுதியுடன் முடியும். அதன் பின் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதில் பங்கு பெறும் இந்திய வீரர்கள் உள்ளூர் ரஞ்சி தொடரில் ஆட வேண்டாம் என பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது.
பிசிசிஐ முன்யோசனை
முக்கியமான ஆஸ்திரேலிய தொடருக்கு முன் பந்துவீச்சாளர்கள் யாரும் காயத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. அதன் படி பந்துவீச்சாளர்கள் அஸ்வின், இஷாந்த் ஆகியோர் ரஞ்சி தொடரின் அடுத்த போட்டிகளில் ஆடவில்லை.
பிடிவாதம் பிடித்த ஷமி
ஷமி பிடிவாதமாக ரஞ்சி தொடரில் ஆடுவேன் என கூறியதை அடுத்து அவருக்கு ஒரு இன்னிங்க்ஸுக்கு 15-17 ஓவர்கள் வரை மட்டுமே வீச வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் அனுமதி அளித்தது. அதை பெங்கால் அணியின் கேப்டனும் ஒப்புக் கொண்டார்.
தேவையற்ற சர்ச்சையில் ஷமி
எனினும், கேரளா அணிக்கு எதிரான போட்டியில் ஷமி முதல் இன்னிங்க்ஸில் 26 ஓவர்கள் வீசினார். இது தற்போது தேவையற்ற சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. பிசிசிஐ இன்னும் இந்த விஷயத்தில் எந்த கருத்தையும் கூறவில்லை. பெங்கால் அணியின் பயிற்சியாளர் ஷமி தானாகவே தான் முன்வந்து அதிக ஓவர்கள் பந்துவீசினார். நாங்கள் யாரும் அவரை கட்டாயப் படுத்தவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
புல்லரிக்க வைத்த ஷமியின் விளக்கம்
இது பற்றி பேசிய ஷமி, "நீங்கள் மாநில அணிக்காக ஆடுகிறீர்கள் என்றால் உங்கள் கடமையை செய்ய வேண்டும்" எனக் கூறி புல்லரிக்க வைத்தார். எங்கேயோ போய் வலைப் பயிற்சி செய்வதை விட சொந்த மண்ணில் மாநிலத்துக்காக விளையாடுவது பலன் தரும் என்றும் கூறினார் ஷமி.
அப்படி என்ன பந்து வீசினார் ஷமி?
சரி, அப்படி என்ன தான் 26 ஓவரில் பந்து வீசினார் ஷமி? இதோ அவரது பந்துவீச்சு விவரம். 26 ஓவர்களில் 100 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் எடுத்துள்ளார் ஷமி. அதாவது முதல் தர டெஸ்ட் போட்டியில் ஓவருக்கு சுமார் 4 ரன்கள் கொடுத்துள்ளார். அதுவும் கேரளா அணிக்கு எதிராக. இதுக்கு மேல நீங்க தான் சொல்லணும்..