மும்பை: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 150 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றிய முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை இந்திய அணியின் டோணி பெற்றிருக்கிறார்.
கேப்டன் பொறுப்பில் இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்களில் தற்போது அசாருதீன் முதலிடத்தில் உள்ளார். அவர் 174 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியிருக்கிறார். இதேபோல் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன்கள் வரிசையிலும் அசாருதீன் (90 வெற்றி) முதலிடத்தில் இருக்கிறார்.
அவருக்கு அடுத்த இடத்தில் டோணி (87 வெற்றி, 51 தோல்வி) இருக்கிறார். 147 போட்டிகளில் கேப்டனாக இருந்த கங்குலி, 66 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியதன் 150 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றிய முதல் விக்கெட் கீப்பர் என்ற இலக்கை டோணி எட்டியுள்ளார்.
இதேபோல் அனைத்து ஐசிசி தொடர்களிலும் வெற்றி பெற்ற அதாவது 20 ஓவர் உலக கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையையும் டோணி பெற்றுள்ளார்.