ஒற்றுமை
இந்திய அணி முன்னேற்றம் அடைய, கேப்டன் டோணி பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அணி வீரர்களிடம் காணப்பட்ட பிரிவினையை சரிகட்டி, அனைவரையும் ஒற்றுமைப்படுத்தியதில் டோணியின் பங்கு அபாரம் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
டோணி பங்களிப்பு
வீரர்களை ஒன்றாக அழைத்துச் சென்று ஹோட்டல்களில் சாப்பிடுவது, ஒன்றாக வாலிபால் விளையாடுவது, ஒன்றாகவே ஊர்சுற்றுவது என, அணி வீரர்களை நல்ல நண்பர்கள்போல பழகச் செய்ய டோணி பகீரத முயற்சிகளை எடுத்துள்ளார். அதன் விளைவு, அணியின் ஒற்றுமையை ஃபீல்டிலும் பார்க்க முடிகிறது.
ஹிந்தி ஜிந்தாபாத்
ஆனால், இதையெல்லாம் தவிர்த்து, அணியின் வெற்றிக்கு டோணி வேறு ஒரு முக்கியமான காரணத்தையும் சொல்கிறார். அது என்ன காரணம் என்று கேட்டால் அசந்துதான் போக வேண்டும். ஆம்.. ஹிந்தி மொழியில் வீரர்கள் பேசுவதும், வெற்றிக்கான முக்கிய காரணம் என்கிறார் டோணி.
வியூகங்கள்
டோணி இதுபற்றி நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்டம்புக்கு பின்னால் நின்றபடி, பேட்ஸ்மேன்களின் நடவடிக்கையை கண்காணிப்பேன். அவர்கள் அடுத்ததாக என்ன மாதிரி ஷாட் அடிக்க முயற்சிப்பார்கள் என்பதை யூகித்துக் கொண்டு, அதை முறியடிக்கும் வியூகத்தை உருவாக்குவேன். அந்த வியூகத்தின் படி பந்தை வீசுமாறு பவுலர்களுக்கு கூறுவேன். ஆனால் நின்ற இடத்தில் இருந்தபடியே, பவுலர்களுக்கு எனது அறிவுரையை ஹிந்தியில்தான் கூறுவேன்.
எதிரணி வீரர்கள் ஏமாறுவார்கள்
அணியிலுள்ள அனைத்து வீரர்களுக்கும் ஹிந்தி தெரியும் என்பதால், இந்த மொழியில் உரையாடிக் கொள்வது எளிதாக இருக்கிறது. இதில் மற்றொரு வசதி என்னவென்றால், நான் எந்த மாதிரி வியூக அடிப்படையில் பந்து வீச சொல்கிறேன் என்பதை எதிரணி வீரர்களால் கண்டுபிடிக்க முடிவதில்லை. ஏனெனில், சில ஆசிய வீரர்களை தவிர வேறு அணி வீரர்களுக்கு ஹிந்தி தெரியாது. இதை வைத்துதான், எதிரணிகளை மடக்கி வருகிறஏன். இவ்வாறு டோணி கூறினார்.