நானும், டிவில்லியர்ஸும் இருந்திருக்கனும்.. புலம்பும் கோஹ்லி
பெங்களூரு: நானும், டிவில்லியர்ஸும் சீக்கிரமே அவுட் ஆனதே அணிக்குப் பெரும் பின்னடைவாக போய் விட்டது என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.
உண்மையில் கெய்ல் ஏற்படுத்திக் கொடுத்த அட்டகாசமான தொடக்கத்தை பின்னால் வந்தவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் கோட்டை விட்டதால்தான் அழகாக கிடைத்த வெற்றி வாய்ப்பை அப்படியே ஹைதராபாத்திடம் பறி கொடுத்து விட்டது பெங்களூரு.
குறிப்பாக எதிர்பாராத விதமாக கோஹ்லி அவுட்டானது, அதிகம் நம்பிய டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்தது ஆகியவை ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது. அதுவரை நம்பிக்கையிழந்து காணப்பட்ட ஹைதராபாத் அணியினர் சட்டென சுதாரித்து கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி பெங்களூரு பேட்டிங்கை சீர்குலைத்து விட்டனர்.
இருப்பினும் கூட 19 ஓவர் வரைக்கும் பெங்களூருக்கு வாய்ப்புகள் இருக்கவே செய்தன. ஆனால் அவர்களது பேட்ஸ்மென்கள் அதிரடியாக ஆட முயற்சிக்காமல் போய் விட்டனர். ஒரு நல்ல அனுபவம் வாய்ந்த அதிரடி வீரர் அந்த நேரத்தில் இருந்திருந்தால் நிச்சயம் வென்றிருக்க முடியும்.

கோஹ்லி சோகம்
ஆட்டத்தின் முடிவு கேப்டன் கோஹ்லிக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. 2வது இடம்தான் பெங்களூரு அணிக்கு என்பதை தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என்று கோஹ்லி கூறியுள்ளார். போட்டி முடிவில் கோஹ்லி கூறியதாவது:

பெரிய அடி
நானும், டிவில்லியர்ஸும் அவுட்டானது அணிக்குப் பெரிய பின்னடைவைக் கொடுத்து விட்டது. நாங்கள் இருந்திருந்தால் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

நாங்கள் நன்றாகவே விளையாடினோம்
நாங்கள் ஆடிய விதம் எங்களுக்குப் பெருமையாகவே உள்ளது. நிச்சயம் நாங்கள் சிறப்பாகவே ஆடினோம். இந்த ஆட்டம் பெங்களூருக்காக, பெங்களூரு ரசிகர்களுக்காக. மோசமான காலத்திலும் கூட எங்களுக்கு ஆதரவாக அவர்கள் இருந்துள்ளனர். ரிசல்ட் வேறு மாதிரியாக வந்திருந்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

973 ரன்கள் எடுத்தது மகிழ்ச்சி
இந்தத் தொடரில் நான் ஆயிரம் ரன்களை அடிக்க முடியாவிட்டாலும் கூட 973 ரன்கள் எடுத்ததே மகிழ்ச்சிதான். சந்தோஷம் தருகிறது. இருப்பினும் அணிக்கு கிடைத்த முடிவால் என்னால் இதை (973) முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.

ஹைதராபாத் பவுலிங் சூப்பர்ப்
ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. மிகச் சிறந்த, வலிமையான பந்து வீச்சை அவர்கள் வெளிப்படுத்தினர். நானும் அந்த பந்து வீச்சுக்கு எதிராக நன்றாகத்தான் ஆடினேன். ஆனால் அவர்களது கை ஓங்கி விட்டது என்றார் கோஹ்லி.

கட்டிங் போட்ட போடு
நேற்றைய ஆட்டத்தின் போக்கை மாற்றியவர் பந்து வீச்சாளர் பென் கட்டிங்தான். அவருக்குத்தான் ஆட்ட நாயகன் விருதும் கிடைத்தது. கடைசி ஓவரையும் இவர்தான் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications