லாகூர்: பாகிஸ்தானை விட இந்தியாவில்தான் நிறைய அன்பு கிடைப்பதாக கூறிய பாகிஸ்தான் டி 20 அணி கேப்டன் ஷாஹித் அப்ரிதிக்கு பாகிஸ்தானில் சிக்கல் வந்துள்ளது. அவருக்கு எதிராக லாகூர் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளார் ஒருவர். இதையடுத்து லாகூர் கோர்ட் அப்ரிதிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை டி 20 போட்டியில் விளையாட இந்தியா வந்துள்ளது. இந்தியா வந்து இறங்கியதும் கேப்டன் அப்ரிதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி கொடுத்தார். அப்போது அவர், இந்தியாவில்தான் தங்களுக்கு மிகுந்த அன்பு கிடைப்பதாகவும், பாகிஸ்தானை விட இங்குதான் அதிக அன்பு கிடைப்பதாகவும், இங்கு விளையாட தங்களுக்கு எந்த அச்சமும் இல்லை என்றும் கூறியிருந்தார்.
இது இந்திய மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் பாகிஸ்தானில் சூட்டைக் கிளப்பிவிட்டது. லாகூர் உயர்நீதிமன்றத்தில் அஸார் சித்திக் என்ற வழக்கறிஞர் அப்ரிதி மீது வழக்குப் போட்டுள்ளார். அதில், அப்ரிதி கூறியது குறித்து அவரிடம் கோர்ட் விளக்கம் கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து விளக்கம் கேட்டு லாகூர் கோர்ட் அப்ரிதிக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டுள்ளது. அவருக்கு 15 நாள் அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.