முதல் வரிசைக்கு முன்னேறலாம்
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்திலிருக்கும் இங்கிலாந்து அணி, இரண்டாமிடத்தில் உள்ள இந்திய அணியை சந்திக்கிறது. இத்தொடரை இந்திய அணி வெல்லும் பட்சத்தில் இந்திய அணி தர வரிசையில் முதல் இடத்தை பிடிக்கும். இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா அணியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது. அந்த அணியின் பெரும்பலம் அவர்களது பேட்டிங். இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசை, அதிக ரன்களை குவிக்கக் கூடியது.
பலமான இங்கிலாந்து பேட்டிங்
துவக்க வீரர்கள் பேர்ஸ்டோவ் மற்றும் ராய் நிலைத்து நின்று ஆடும் பட்சத்தில் அவர்கள் 400 ரன்களை கூட எளிதில் குவித்துவிடுவார். நடுவரிசையில் ரூட்,மோர்கன்,பட்லர் ஆகியோரும் சிறப்பாக விளையாடுவர். ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அணியில் இடம்பெறும் பட்சத்தில் அலெக்ஸ் ஹேல்ஸ் அணியில் இருந்து கழட்டி விடப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் இடம்பெறாதது அவர்களுக்கு இழப்பேயாகும்.
பந்து வீச்சிலும் ஸ்டிராங்
டேவிட் வில்லி, பிளங்கெட் மற்றும் ஜாக் பால் ஆகியோர் அணியில் இடம்பெறலாம் என்று தெரிகிறது. சுழல் பந்துவீச்சு ரஷீத் மற்றும் மெயின் அலியை நம்பியே உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா அணியின் பெரும்பாலான விக்கெட்கள் இங்கிலாந்து அணியின் சுழல் பந்துவீச்சாளர்களால் வீழ்த்தப்பட்டது. வலிமையான இந்திய அணி, இங்கிலாந்து சுழலை எளிதாக எதிர்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
சிறந்த தொடக்கம் அவசியம்
இந்திய அணி இங்கிலாந்தை 20 ஓவர் தொடரில் வென்று மனதைரியத்துடன் உள்ளது. துவக்க வீரர்கள் ரோஹித் மற்றும் தவான் அனைத்து போட்டிகளிலும் சிறந்த தொடக்கம் தரவேண்டியது அவசியமாகும். விராட் கோஹ்லி மூன்றாவது வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 20 ஓவர் தொடரில் ராகுல் கோஹ்லிக்கு பதிலாக மூன்றாவது வீரராக களமிறங்கி சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
வருவாரா ரெய்னா
ரெய்னா அணியில் இடம்பிடிப்பார் என தெரிகிறது. அவர் இந்திய அணிக்கு பகுதி நேர சுழல் பந்துவீச்சாளராகவும் செயல்படுவதால் அவருக்கான வாய்ப்புகள் அதிகம். பும்ரா இல்லாத வேகப்பந்துவீச்சு சிறப்பாக செயல்படுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். உமேஷ் யாதவ் , புவனேஸ்வர் குமார், சாஹல் , குல்தீப் யாதவ் மற்றும் ஹர்டிக் பாண்டியா ஆகியோர் பிரதான பந்துவீச்சாளர்களாக களமிறக்கப்படலாம். தினேஷ் கார்த்திக் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறுவது சந்தேகமே. உலகின் தலை சிறந்த இரு அணிகள் மோதுவது ரசிகர்களுக்கு விருந்தாகவே அமையும். ஒருநாள் போட்டித்தொடரை வெல்ல இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் !!