அக்.17 முதல்
அக்டோபர் 17 முதல் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர் நவம்பர் 14ம் தேதி முடிவடைகிறது. போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறுகிறது. முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் அனைத்தும் அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும். இதில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், பாப்புவா நியூ கினியா ஆகிய 8 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து மோதுகின்றன. இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும்.
பெரும் எதிர்பார்ப்பு
குரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வின்னர் குரூப் ஏ, ரன்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. அதேபோல், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ரன்னர் குரூப் ஏ, வின்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில், இந்திய அணி வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், மாலை 6 மணிக்கு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
ஆலோசனையாளராக தோனி
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், ரோஹித் சர்மா, விராட் கோலி (c), லோகேஷ் ராகுல், சூர்யா குமார் யாதவ், ரிஷப் பண்ட் (wk), இஷான் கிஷன் (wk), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மாற்று வீரர்களாக ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்றும் பிசிசிஐ அறிவித்தது.
அம்பலப்படுத்தனும்
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் குறித்து அந்நாட்டின் முன்னாள் வீரர் அசிம் கமல் பேசியுள்ளார். அதில், "இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் அதிக கவனம் செலுத்தியதால் நமது கிரிக்கெட் பாழாகிவிட்டது. முதலில் இந்த அழுத்தத்தை போக்க, மற்ற அணிகளுடன் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளிலும் நாம் கவனம் செலுத்தப்பட வேண்டும். எப்போதும் இந்தியாவுடன் மோதும் போட்டிகள் குறித்து மட்டும் நாம் பேசிக் கொண்டிருந்தால், பாழாய் போய்விடுவோம். மற்ற அணிகளுடனான போட்டிகளும் நமக்கு முக்கியமே. பாகிஸ்தானின் மூத்த வீரர்கள் வரவிருக்கும் இளம் நட்சத்திரங்களுக்கு உதவுவதில்லை, ஏனென்றால் அவர்கள் மாற்றப்படுவார்கள் என்று பயப்படுகிறார்கள். இந்த போக்கு மிக நீண்ட காலமாக தொடர்கிறது, அதை ஒழிக்க வேண்டும். பாகிஸ்தான் கிரிக்கெட்டை சரிசெய்ய புதிய கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ், துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும். கரையான் போல் சாப்பிட்டவர்களை அவர் அம்பலப்படுத்தி பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்று காட்டமாக பேசியுள்ளார்.