ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளிக்குமா ஹாங்காங் ??
துபாய் : ஆசிய கோப்பை போட்டிதொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று நடைபெறவிருக்கிறது. பி பிரிவில் உள்ள பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் இன்று மோதவிருக்கின்றன.
அப்போட்டி குறித்த ஒரு அலசல் இதோ.
ஆசிய கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் இதுவரை இரண்டு முறை மோதியுள்ளன. இரண்டிலுமே பாகிஸ்தான் அணி தலா 173 மற்றும் 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளது.

உலகின் வலுவான அணிகளில் ஒன்றான பாகிஸ்தான் அணிக்கும்,ஒருநாள் அந்தஸ்தை மீண்டும் பெறத்துடிக்கும் ஹாங்காங் அணிக்கும் இடையேயான போட்டி சற்றே சுவாரஸ்யத்தை உண்டாக்கியுள்ளது.
பாகிஸ்தான் அணி சமீபத்தில் ஜிம்பாப்வே அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரை வென்றது. அந்த அணியின் பாக்கர் ஜமான் ஒருநாள் தொடரில் 515 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும். இந்த போட்டி பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணியை எதிர்கொள்ளபோகும் ஒரு பயிற்சி ஆட்டமாகவே இருக்கும்.
ஹாங்காங் அணியை பொறுத்தவரை பாகிஸ்தான் அணிக்கு ஈடு கொடுத்து விளையாடினாலே அது அவர்களுக்கு வெற்றி தான். எனினும் அவர்கள் சிறப்பாக விளையாடி அதிர்ச்சி அளித்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை..
பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் அதிக ரன்களை குவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் இந்த வருடம் அந்த அணி நான்கு முறை 100+ ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹாங்காங் அணி தனது அடுத்த ஆட்டத்தில் இந்திய அணியை நாளை மறுதினம் எதிர்கொள்ள இருக்கிறது.
Story first published: Sunday, September 16, 2018, 15:26 [IST]
Other articles published on Sep 16, 2018


Click it and Unblock the Notifications