சிமெண்ட் சாலை
ராவல்பிண்டி ஆடுகளம் சிமெண்ட் சாலை போல இருந்ததால் பந்து பேட்டிற்கு நன்றாகவே வந்தது. ஆடுகளத்தில் சுழற் பந்துவீச்சு, வேகப்பந்து வீச்சு என எதுவும் எடுப்படவில்லை.இதனால் லட்டு சாப்பிடுவது போல் இங்கிலாந்து வீரர்கள் ரன்களை சேர்த்தனர். பேட்டிற்கு அல்வா போல் பந்து வந்ததால் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து வீரர்கள் அசத்தினர்.
233 ரன்கள் ஜோடி
தொடக்கவீரர் ஜாக் கிராலி 111 பந்துகளில் 122 ரன்கள் விளாசினார். இதில் 21 பவுண்டரிகள் அடங்கும் இதேபோன்று மற்றொரு தொடக்கவீரரான பென் டக்கட்டும் சதம் அடித்தார். இதில் 15 பவுண்டரிகள் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 233 ரன்களை குவித்தது. இதனை அடுத்து களமிறங்கிய முன்னாள் கேப்டன் ஜோ ரூட் 23 ரன்களில் வெளியேற ஆலிவ் போப் மற்றும் ஹாரி புருக்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது.
4 பேர் சதம்
இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் தடுமாறினர். ஆலிவ் போப் 104 பந்துகளில் 108 ரன்கள் விளாச ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி 81 பந்துகளில் சதம் விளாசினார். இதில் 14 பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தினார். 15 பந்துகளை எதிர்கொண்ட அவர் 34 ரன்கள் விளாசினார். இதில் ஆறு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.
506 ரன்கள் குவிப்பு
இதன் மூலம் முதல் நாளில் 75 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இதில் இங்கிலாந்து அணி 506 ரன்கள் குவித்து நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. இதனை அடுத்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நாள் ஆட்டத்தில் 500 ரன்கள் கடந்த ஒரே அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்தது. பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளத்தை தயாரித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் போன்ற பலமான பந்துவீச்சாளர்களுக்கு இந்த நிலைமை என்றால் ஆடுகளம் எவ்வளவு மோசமாக அமைக்கப்பட்டிருக்கும் என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.