ரிஷப் பண்ட் நிலை
ரிஷப் பண்ட் உலகக்கோப்பை தொடருக்கு பின் பேட்டிங்கில் பார்ம் இழந்தார். தொடர்ந்து பல தொடர்களில் மோசமாக செயல்பட்ட அவர், கடைசியாக நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக ஆடினார்.
கடும் அழுத்தம்
எனினும், அவரது விக்கெட் கீப்பிங் மோசமாகவே உள்ளது. அதனால், ரசிகர்களிடம் இருந்து தொடர்ந்து அழுத்தத்தை சந்தித்து வருகிறார். போட்டிகளின் இடையே அவர் தவறு செய்தால் பலரும் தோனி பெயரை கூறுவதும் அவருக்கு அழுத்தத்தை அளித்து வருகிறது.
அதிக ஆதரவு
அதே சமயம், ரிஷப் பண்ட்டுக்கு கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் முழு ஆதரவு உள்ளது. பண்ட் மோசமாக ஆடினாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து வருகின்றனர்.
பார்த்திவ் பட்டேல்
முன்பு இந்திய அணியில் இடம் பெற்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்த்திவ் பட்டேல் நிலையும் கிட்டத்தட்ட இதே தான். 17வயதில் இந்திய அணியில் அறிமுகம் ஆகி, இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார் பார்த்திவ்.
வாய்ப்பு கிடைக்கவில்லை
எனினும், தோனியின் வரவால் அணியில் தன் இடத்தை நிரந்தரமாக இழந்தார். அதன் பின் உள்ளூர் போட்டிகளில் அவர் ரன் குவித்த போதும் அணியில் தோனி இருந்ததால் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
பார்த்திவ் அறிவுரை
இந்த நிலையில், அவருக்கு அறிவுரை சொல்ல மிகவும் பொருத்தமான பார்த்திவ் பட்டேல், பண்ட்டுக்கு சில யோசனைகளை கூறி இருக்கிறார். கருத்து சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள், அதை கண்டு கொள்ளாமல் போட்டியில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.
அரிய வாய்ப்பை பெற்றுள்ளனர்
"இன்றைய இளம் வீரர்கள், பெரிய வீரர்களுடன் விளையாடுவதற்கும், அறையை பகிர்ந்து கொள்வதற்கும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளனர். ஆனால், பார்முக்கு வர அவர்கள் போராடும் போது, எல்லா தரப்பிலிருந்தும் கருத்துக்கள் கூறப்படும். அந்த கருத்துக்களிலிருந்து விலகி விளையாட்டில் கவனம் செலுத்துவது தான் முக்கியம்" என பார்த்திவ் பட்டேல் கூறினார்.
நிறைய அழுத்தம்
"நீங்கள் இந்தியாவுக்காக விளையாடினால், நிறைய அழுத்தம் இருக்கும். ஒவ்வொரு வீரருக்கும் வெவ்வேறு சூழ்நிலைகளில் அழுத்தம் இருக்கும். இதுபோன்ற அழுத்தமான சூழ்நிலைகளில் தான் உங்கள் திறமைகள் மதிக்கப்படுகின்றன" என்றும் கூறினார் பார்த்திவ்.
அனுபவித்து ஆடிய பண்ட்
"வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் பண்ட் சிறப்பாக செயல்பட்டார். அவர் மைதானத்தில் அனுபவித்து ஆடியதை கண்டோம். அதுபோன்ற அழுத்தமான சூழ்நிலைகளில் இருந்து வெளியே வரும்போது தான் அவர் ஒரு நல்ல வீரராக முடியும்" என்றார் பார்த்திவ்.
மற்றவர்களின் கருத்துக்கள் பொருட்டல்ல
"அணி நிர்வாகமும், தேர்வாளர்களும் உங்களை ஆதரிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தால் மற்றவர்களின் கருத்துக்கள் பொருட்டல்ல. நீங்கள் அந்த தருணத்தை அனுபவித்து, உங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்" என்று பார்த்திவ் கூறினார்.