டெல்லி:இதுவரை எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனையை சத்தேஸ்வர் புஜாரா செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 8 நாட்கள் விளையாடிய சாதனைக்கு அவர் சொந்தக்காரர்.
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வென்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தாலும், 5 நாட்களிலும் களத்தில் இருந்த வீரர்கள் வரிசையில் மூன்றாவதாக இணைந்தார் புஜாரா. இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் மூன்று நாட்களும் அவர் களத்தில் இருந்துள்ளார். இதன் மூலம் தொடர்ந்து, 8 நாட்கள் களத்தில் இருந்த ஒரே இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை புஜாரா பெற்றுள்ளார்.
முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில், முதல் நாளில் 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 8 ரன்கள் எடுத்தார். இரண்டாவது நாளில், 58 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் எடுத்தார். மூன்றாவது நாளில் 15 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தார்
நான்காவது நாளில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சில் 7 பந்துகளில் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தது 5வது நாளில், 44 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார்.
இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சின் முதல் நாள், அதாவது தொடர்ந்து 6வது நாளாக அவர் களத்தில் இருந்தார். அப்போது, 7 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தார். அடுத்தது 7வது நாளில் 277 பந்துகளில், 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 8வது நாளில், 78 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார்.
இதனிடையில் சைலண்டாக, டெஸ்ட் போட்டிகளில் மிக வேகமாக 3,000 ரன்கள் சேர்த்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் அவர் முறியடித்தார்.