காலி மைதானங்களில் போட்டிகள்
கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு யூஏஇயில் நடத்தப்படவுள்ள ஐபிஎல் போட்டிகள் வரும் மாதம் 19ம் தேதி துவங்கி நவம்பர் 10ம் தேதி வரையில் அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா போன்ற இடங்களில் நடத்தப்படவுள்ளது. மேலும் ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் இந்த ஆண்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
லஷ்மன் வீடியோ செய்தி
இந்நிலையில் காலி மைதானங்களில் நடத்தப்பட்டாலும் ஐபிஎல் போட்டிகளின் தரம் சிறிதளவும் குறையாது என்று முன்னாள் பேட்ஸ்மேனும் தற்போதைய சன் ரைசர்ஸ் ஐதராபாத்தின் வழிகாட்டியுமான விவிஎஸ் லஷ்மன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து விவிஎஸ் லஷ்மன் வெளியிட்டுள்ள செய்தியை சன் ரைசர்ஸ் ஐதராபாத் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
ஐபிஎல் தரம் குறையாது
மைதானத்தில் ரசிகர்கள் இல்லாத போதிலும் வழக்கம் போலவே ஐபிஎல் போட்டிகள் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தையும் கொண்டாட்டத்தையும் அளிக்கும் என்று அவர் கூறியுள்ளார். இதன்மூலம் ஐபிஎல்லின் சக்தியோ தரமோ குறையும் என்று யாரும் நினைக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இளம் வீரர்கள் தேர்ந்தெடுப்பு
யூஏஇயில் பிட்ச்கள் மாறுபட்டு இருக்கும் என்றாலும் அதை நிவர்த்தி செய்யும்வகையில் அதன் ஊழியர்கள் மெனக்கெடுவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மிடில் ஆர்டரை பலப்படுத்தும்வகையில் வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அணியில் துடிப்பான இளம் வீரர்களும் அனுபவம்மிக்க மூத்த வீரர்களும் கலந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.