பெங்களூரு: பெங்களூரு பல்கலைக்கழகம் அறிவித்திருந்த டாக்டர் பட்டத்தை பெற ராகுல் டிராவிட் மறுத்துள்ளார்.
இந்திய அணியின் பெருஞ்சுவர் என வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட், டெஸ்ட் கிரிக்கெட் களத்தில் நின்றால் அது எதிரணி பவுலர்களுக்கு மனதளவில் பலவீனத்தை கொடுத்துவிடும். இந்திய அணிக்கு தூணாக நின்று பல வெற்றிகளை பெற்றுத் தந்தவர் டிராவிட். தவிர, அணியை பல நேரங்களில் தோல்வியில் இருந்து மீட்டு வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றவர்.
இவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் கடந்த 2014ல் கர்நாடகாவின் குலர்கா பல்கலைக் கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. தற்போது பெங்களூரில் உள்ள விஸ்வேஷ்வரய்யா பொறியியல் கல்லூரி டிராவிட்டுக்கு மற்றொரு கெளரவ பட்டம் வழங்க திட்டமிட்டுள்ளனர்.
வரும் 27ம் தேதி கல்லூரியின் பட்டமளிப்பு விழாவின் போது டிராவிட்டுக்கு பட்டம் அளிக்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டது பெங்களூருவின் விஸ்வேஷ்வரய்யா பொறியியல் கல்லூரியில் தான் டிராவிட்டின் தாய் புஸ்பா, பேராசிரியராக பணியாற்றி வருகிறார். எனவே அவர் கையாலே டிராவிட் இந்த பட்டத்தை பெறலாம் என்றும் கூறப்பட்டது.
இந்தநிலையில், தானே கிரிக்கெட் பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் வாங்க ஆசைப்படுவதாகவும், அதனால் தனக்கு இந்த கவுரவ டாக்டர் பட்டம் வேண்டாம் என்றும் டிராவிட் தெரிவித்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.