ஜெய்ப்பூர்: ஐபிஎல் சீசன் 11ன் 6வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோத உள்ளன. தங்களுடைய முதல் ஆட்டத்தில் இரு அணிகளும் தோல்வி அடைந்துள்ளதால், இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
ஐபிஎல் சீசன் 11 போட்டிகள் துவங்கியுள்ளன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில் இதுவரை 5 ஆட்டங்கள் முடிந்துள்ளன. முதலில் நடந்த சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போட்டியில், கடைசி ஓவர்களில் பிராவோவின் அதிரடியில் சிஎஸ்கே வென்றது.
இரண்டாவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் அணியின் கேப்டனான தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் டாஸ் வென்றார். முதலில் ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
சீசனின் மூன்றாவது ஆட்டத்தில், விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை, மற்றொரு தமிழரான தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றது.
நான்காவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் அணி 15.5 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
நேற்று இரவு நடந்த 5வது ஆட்டத்தில் கொல்கத்தா அணியை, 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்றது. இந்த சீசனின் 6வது ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையே, ஜெய்ப்பூரில் இன்று இரவு நடக்க உள்ளது.
முதல் லீக் ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளதால், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் உள்ளன. இரு அணிகளும் இதுவரை 16 முறை மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் 10 முறை வென்றுள்ளது. ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன ரஹானே மற்றும் இதுவரை கோப்பையை வெல்லாத டெல்லி அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் ஆகியோரின் கேப்டன்சி திறமையை நிரூபிக்கும் ஆட்டமாகவும் இன்றைய போட்டி அமைய உள்ளது.