கடைசி நேரத்துல இப்படி கேப்டனை மாத்தறது சரியில்லை.. போர்க்கொடி தூக்கிய முக்கிய வீரர்கள்!
ஹைதராபாத் : ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக ஆடி வரும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரஷித் கான் மற்றும் முஹம்மது நபி, ஆப்கன் கிரிக்கெட் அணியின் கேப்டனை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது முறையாக 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஆட உள்ளது. இந்த முறை சர்வதேச போட்டிகளில் நல்ல அனுபவம் பெற்றுள்ள ஆப்கன் அணி, பெரிய அணிகளை மிரட்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தனித்தனி கேப்டன்கள்
இந்த சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு புதிய மாற்றம் ஒன்றை செய்துள்ளது. அதன்படி, தற்போது அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக இருக்கும் அஸ்கார் ஆப்கன் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளுக்கு தனித்தனி கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமநிலையை குலைக்கும்
உலகக்கோப்பை தொடர் இன்னும் ஒரு மாதத்தில் துவங்க உள்ள நிலையில், இந்த மாற்றம் தேவையற்றது, அணியின் சமநிலையை குலைக்கும் என எதிர்ப்புக் குரல் கொடுத்துள்ளனர் ரஷித் கான் மற்றும் முஹம்மது நபி.

இவர்கள் குரல் முக்கியம்
இவர்களில் ரஷித் கானை டி20 போட்டிகளுக்கு கேப்டனாக அறிவித்துள்ளது ஆப்கன் கிரிக்கெட் போர்டு. நபி முன்னாள் கேப்டன் ஆவார். எனவே, இவர்களது எதிர்ப்புக் குரல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அவர்தான் சரியான கேப்டன்
அஸ்கார் ஆப்கன் தலைமையில் தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் மிகப்பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. பல முக்கிய வெற்றிகளை பெற்றுள்ளது எனக் கூறும் நபி, ரஷித் கான், உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்த அவர்தான் சரியான கேப்டன் என கூறியுள்ளனர்.

சரியான முடிவில்லை
ஒருநாள் அணிக்கு குலாபுதின் நயிப் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உலகக்கோப்பை தொடரில் அஸ்கார் ஆப்கன் வழிகாட்டுதலோடு செயல்படுவாரா? என்பது தெரியவில்லை. பெரிய தொடருக்கு முன் தேவையில்லாமல் கேப்டனை மாற்றுவது சரியான முடிவில்லை!


Click it and Unblock the Notifications