எச்சிலை பயன்படுத்த தடை
கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் முடங்கியுள்ள நிலையில், அதை மீண்டும் துவக்கும் நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளின் கிரிக்கெட் போர்டுகளும் ஐசிசியும் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றை கவனத்தில் வைத்து பந்துகளை ஷைன் செய்ய எச்சிலை பயன்படுத்த தடை விதிக்க ஐசிசி சிறப்பு குழு பரிந்துரைத்துள்ளது.
கிரிக்கெட்டின் சுவாரஸ்யம் குறையும்
ஐசிசியின் இந்த முடிவுக்கு பல்வேறு நாடுகளின் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் பந்து ஸ்விங் ஆவது குறைந்து, போட்டிகளின் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்றும் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தர முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். எச்சிலுக்கு மாற்று என்பது கண்டிப்பாக வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
போதிய பயிற்சி அவசியம்
இந்நிலையில் பந்தை ஷைன் செயவ்தற்கு எச்சிலை பயன்படுத்துவது என்பது ஒரு வழக்கம் என்றும், அதை பயன்படுத்தாமல் பௌலிங் செய்ய போதிய பயிற்சி அவசியம் என்றும் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக இன்ஸ்டா நேரலையில் பங்கேற்ற அஸ்வின், வீரர்கள் அனைவரும் இணைந்து, இதை பயிற்சி செய்தால், இது சாத்தியமே என்றும் கூறியுள்ளார்.
70 -80க்கு பின்னோக்கி சென்றுள்ளது
இதுவரை 71 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 365 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஸ்வின், கேரம் பாலை பயிற்சி செய்ய தனக்கு 4 ஆண்டுகள் ஆனதாக தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் கிரிக்கெட்டை 70 -80களுக்கு மீண்டும் அழைத்து சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அப்போது, விக்கெட் வீழ்ந்தால், வீரர்களிடையே எந்த கொண்டாட்டமும் இருக்காது, அதேபோல தற்போது கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.