ஜடேஜா மீது தாக்குதல்
இதனிடையே நாட்டிங்காம் நகரில் நடந்த, முதல் போட்டியின் 2வது நாளின் உணவு இடைவேளையின் போது, பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜடேஜா மற்றும் பந்து வீச்சாளர் ஆண்டர்சன் ஆகியோர் மைதானத்தை விட்டு ஒன்றாக பெவிலியனை நோக்கி நடந்து சென்றனர். அப்போது ஜடேஜாவை, ஆண்டர்சன் திட்டியதாகவும் பிடித்து தள்ளி விட்டதாகவும் புகார் எழுந்தது.
ஐசிசியில் இந்தியா புகார்
இந்திய அணி மேலேஜர் சுனில் தேவ் இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளித்தார். ஐசிசி சட்டத்தின் 2.3.3 பிரிவின்கீழ் வரும் இந்த விதிமீறலுக்காக ஆண்டர்சனுக்கு இரு டெஸ்ட் அல்லது நான்கு ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்க முடியும்.
பதில் புகார்
இதைத்தொடர்ந்து ஜடேஜா மீது இங்கிலாந்து அணி மேலாளர் பில் நியாலே, ஐசிசியிடம் புகார் அளித்தார். அந்த புகாரில் "திடீரென ஆண்டர்சனை நோக்கி திரும்பிய ஜடேஜா, அவரை மிரட்டும் தோரணையில் ஆக்ரோஷமாக ஆண்டர்சனை நோக்கி நடந்து சென்றார், வசவு சொற்களால் திட்டினார்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
விசாரணை
இந்த புகார் குறித்து இன்று விசாரணை நடத்தப்பட்டது. சம்மந்தப்பட்ட இரு வீரர்கள், அவர்களின் தரப்பு வக்கீல்கள், சாட்சியங்களிடம் சுமார் இரண்டரை மணி நேரம் ஐசிசிக்கான போட்டி நடுவர் டேவிட் பூன், விசாரணை நடத்தினார். மேலும், சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும் போட்டு பார்த்தார்.
அபராதம்
இதன்பிறகு, ரவீந்திர ஜடேஜா மீதான குற்றச்சாட்டு, லெவல்-1 பிரிவின்கீழ், ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி முதல் டெஸ்ட் போட்டிக்கான ஊதியத்தில் பாதியை அபராதமாக விதித்து டேவிட் பூன் உத்தரவிட்டுள்ளார். ஆண்டர்சன் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் அளித்த புகார் மீதான விசாரணை ஆகஸ்ட் 1ம்தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கு நடுவேயான 3வது டெஸ்ட் போட்டி வரும் 27ம்தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.