பண்ட் ஏன் தனியாக ட்ரைவிங் செய்யனும்?.. நல்ல விஷயத்திற்கு சென்ற போது நேர்ந்த கதி.. உண்மை காரணம் இதோ
ரூர்கி: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்த போதும், எதற்காக தனியாக காரை ஓட்டிச் சென்றார், அவரிடம் ஓட்டுநர்களே இல்லையா? என்ற கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது.
கிரிக்கெட் உலகில் தற்போது மிகப்பெரும் பேசுப்பொருளாக இருப்பது ரிஷப் பண்ட்-க்கு கார் விபத்து ஏற்பட்டுள்ளது தான். டெல்லி நோக்கி பயணித்து வந்த அவருக்கு விபத்து ஏற்பட்டு படுகாயங்கள் ஏற்பட்டன.
இதனையடுத்து உடனடியாக ரூர்க்கியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பண்ட், தற்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கார் விபத்து
உத்தர்காண்ட்-ல் இருந்து டெல்லிக்கு திரும்பிய ரிஷப் பண்ட், எந்தவித விமான பயணத்தையும் விரும்பாமல் சாலை வழியாக செல்ல முற்பட்டுள்ளார். சுமார் 400 கிமீ தூரத்திற்கு மெர்சீடியஸ் பென்ஸ் காரில் பயணித்து வந்த அவர் தூக்க கலக்கத்தின் காரணமாக சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

எதற்காக சென்றார்?
இந்நிலையில் ரிஷப் பண்ட் எதற்காக அங்கு சென்றார், எதற்காக காரை தனியாக ஓட்டிச்சென்றார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. அதாவது ரிஷப் பண்ட்-ன் சொந்த ஊர் உத்தர்காண்ட்-ல் உள்ள ரூர்கி நகரம் ஆகும். அங்குள்ள தனது தாயுடன் சேர்ந்து புத்தாண்டை கொண்டாட விரும்பியுள்ள பண்ட், அதற்காக காரை எடுத்துக்கொண்டு அவ்வளவு தூரம் சென்றிருக்கிறார்.

எதற்காக ட்ரைவிங்?
ரிஷப் பண்ட் புறப்படுவதற்கு முன்பாக, அவரது நண்பர், நீண்ட தூரம் இருப்பதாகவும் ஓட்டுநர் யாரையாவது அழைத்துச்செல்லுமாறும் அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால் அதனை மறுத்துள்ள பண்ட், எப்போதாவது தான் கார் ஓட்டுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. எனவே, நெடுஞ்சாலை தான் என்பதால் இன்று அதனை பயன்படுத்திக்கொள்ளப்போவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இதே பதிலை தான் ஆம்புலன்ஸ் டிரைவரிடமும் கூறியுள்ளார்.

மருத்துவ அறிக்கை
ரிஷப் பண்ட்-ன் உடல்நிலை குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், அவருக்கு எலும்பு முறிவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், அனைத்து இடங்களிலும் சிறு சிறு காயங்கள் மற்றும் சீராய்ப்புகளும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவர் 4 - 5 மாதங்களில் பழைய உடற்தகுதியை பெறுவார் எனக் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications