பொறுப்பற்ற ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்டை ஒரேடியாக மோசம் என கூறி விட முடியாது. விக்கெட் கீப்பிங்கில் ஓரளவு பரவாயில்லை என்ற இடத்தில் இருக்கிறார். ஆனால், அதிரடி பேட்டிங் செய்வார் என அணியில் ரிஷப் பண்ட்டை எடுக்கிறார்கள். அவரும் அதிரடியாக ஆடுகிறார். நேற்று கூட ஓவருக்கு 14 ரன்களுக்கு மேல் தேவை என்ற சூழ்நிலையில், தினேஷ் கார்த்திக்குடன் இணைந்து அதிரடியாக ஆடினார் பண்ட். ஆனால், அணியின் வெற்றி, தோல்வி பற்றி இவர் அதிகம் கவலை கொள்வதாக தெரியவில்லை. "முடிந்தவரை பவுண்டரி அடிக்க முயல்வேன். ஆட்டமிழந்தால் கவலையில்லை" என்ற இவரது மனோபாவம் இந்தியா முதலில் பேட்டிங் செய்து இருந்தால் சரியாக இருந்திருக்கும். ஆனால், சேஸிங் செய்யும் போதும் அப்படி தான் ஆடுவேன் என்றால் அது சரிதானா?
பண்ட் செய்த தவறு என்ன?
நேற்று 16 பந்துகளில் 20 ரன்கள் அடித்த பண்ட் தேவையில்லாத ஷாட் ஆடி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். உண்மையில் அப்போது பண்ட்டை விட தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடிக் கொண்டு இருந்தார். இவர்கள் இருவரும் கடைசி வரை நின்றால் வெற்றி உறுதி என்ற நிலையில், தூக்கி அடித்து ஆட்டமிழந்தார் பண்ட்.
க்ருனால் பண்டியா யார்?
க்ருனால் பண்டியா அணியில் யார்? பந்துவீச்சாளரா? இல்லை ஆல்-ரவுண்டரா? இரண்டு வேலையையுமே பண்டியா இதுவரை கிடைத்த வாய்ப்புகளில் சரியாக செய்யவில்லை. இவரை சொல்லி குற்றமில்லை. இவரை பகுதி நேர பந்துவீச்சாளராக பயன்படுத்தலாமே ஒழிய முக்கிய பந்துவீச்சாளராக பயன்படுத்துவது சரியான முடிவல்ல. இவர் சுழற்பந்துவீச்சாளர் என கூறுகிறார்கள். ஆனால், பந்து சுழல்வது குறைவு தான். அதற்கு காரணம், இவர் பந்து வீசும் வேகம் அதிகமாக இருப்பது தான். சில சமயம் இவர் வீசும் சுழற்பந்து பவுன்ஸ் ஆகுமோ என்று கூட சந்தேகம் எழுகிறது.
க்ருனால் பண்டியா செய்த தவறு?
நேற்று கடைசி ஓவரில் பேட்டிங் செய்த க்ருனால் பண்டியா, முதல் பந்தில் ஒரு ரன்னோடு நிறுத்திக் கொண்டு ஸ்ட்ரைக்கை தினேஷ் கார்த்திக் வசம் கொடுத்து இருக்கலாம். ஆனால், இரண்டு ரன் ஓடிய பண்டியா, அடுத்த இரண்டு பந்துகளை வீணடித்து ஆட்டமிழந்தார். இவர் தான் கடைசி ஓவர் தோல்விக்கு முக்கிய காரணம். பந்துவீச்சில் 4 ஓவர்களில் 55 ரன்கள் கொடுத்தார். இவரது பந்துவீச்சில் மட்டும் 6 சிக்ஸர்கள் விளாசினர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்.
ராகுலுக்கு அணியில் தேவையா?
ராகுல் இந்தியாவின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இருக்கிறார். ஆனால், எதிலும் தொடர்ந்து சிறப்பாக ரன் குவித்ததாக நினைவில்லை. இவர் மூன்றாவது பேட்ஸ்மேனாக களத்தில் வந்து நின்ற போது, இவரை ஏன் அணியில் எடுத்தார்கள் என்று தான் தோன்றியது. வழக்கம் போல நேற்றும் ரன் அடிக்கத் திணறிய ராகுல் 13 ரன்களில் வெளியேறினார்.
கேப்டன் விராட் கோலி
கேப்டன் கோலியின் தலைமை சரியில்லை. அவரது திட்டங்கள் சரியில்லை. இது தான் உண்மை. கேப்டன் கங்குலி காலத்தில் இருந்து கேப்டன் தோனியின் காலம் வரை பகுதி நேர பந்துவீச்சாளர் இல்லாத இந்திய அணியை பார்த்ததாக நினைவில்லை. ஆனால், கோலி மீண்டும் மீண்டும் கோடு போட்டு வாழ வேண்டும் என்பது போல எண்ணி ஐந்து பந்துவீச்சாளர்களை வைத்துக் கொள்கிறார். கோலியின் அணியில் ஐந்து வீரர்கள் தவிர மற்றவர்கள் பேட்டிங் மட்டுமே செய்வார்கள். ஹர்திக் பண்டியா இருந்த போதும் அணி அப்படி தான் இருந்தது.
கோலி செய்த தவறுகள் என்ன?
நேற்று பண்டியா மற்றும் கலீல் பந்துவீச்சை ஆஸ்திரேலியா விளாசித் தள்ளிய போது இந்திய அணியில் மாற்று பந்துவீச்சாளர்கள் இல்லாத அழுத்தத்தை உணர முடிந்தது. மீண்டும், மீண்டும் பண்டியா பந்து வீச ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் எளிதாக சிக்ஸர்கள் அடித்தனர். இது கோலியின் பந்துவீச்சு திட்டத்தில் உள்ள பெரிய தவறு. மேலும், பேட்டிங்கில் தன் மூன்றாவது இடத்தை ராகுல் வசம் கொடுத்து விட்டு நான்காவதாக இறங்கினார் கோலி. அது அவருக்கு சரி வரவில்லையோ என்றும் தோன்றுகிறது. நேற்று கோலி 4 ரன்களில் வெளியேறினார். அதை விட பெரிய தவறு என்னவென்றால், ஆரோன் பின்ச் கொடுத்த லட்டு போன்ற கேட்சை கோட்டை விட்டார் கோலி.
இந்திய அணியின் தோல்விக்கு இந்த நால்வர் தான் முக்கிய காரணமாக இருந்தார்கள்.