உலகக் கோப்பைத் தோல்வி எதிரொலி-கேப்டன் பதவியிலிருந்து விலகினார் பான்டிங்
சிட்னி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதிப் போட்டியில் இந்தியாவிடம் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் சகாப்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அதற்கு முழுப் பொறுப்பேற்று கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார் ரிக்கி பான்டிங்.

பான்டிங்கின் விலகல் மூலம் ஒரு அருமையான, அபாரமான, திறமையான கேப்டனின் சகாப்தமும் முடிவுக்கு வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்த மிகச் சிறப்பான கேப்டன்களில் பான்டிங்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணியை தொடர்ந்து வலிமையான ஒன்றாக திகழச் செய்த பெருமை இவருக்கு உண்டு. ஆனால் நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் காலிறுதியோடு ஆஸ்திரேலியாவின் பயணம் முடிவடைந்து போனது, நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலிய ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி விட்டது.
இந்த நிலையில் தோல்விக்கு முழுப் பொறுப்பேற்று ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக பான்டிங் அறிவித்துள்ளார்.
மேலும் தனக்குப் பின்னர் கேப்டன் பொறுப்பை வகிக்கக் கூடிய தகுதியும், திறமையும் மைக்கேல் கிளார்க்குக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிட்னியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான்கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது எனதுதனிப்பட்ட முடிவு, எந்த நிர்ப்பந்தமும் இதன் பின்னணியல் இல்லை. கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினாலும், எனது சேவை தேவைப்படும் வரை தொடர்ந்து இரு போட்டிகளிலும் ஆடுவேன் என்றார் பான்டிங்.
38 வயதாகும் பான்டிங், ஸ்டீவ் வாகிடமிருந்து கேப்டன் பொறுப்பைப் பெற்று செயல்பட்டு வந்தார்.கேப்டன் பொறுப்பில் 77 டெஸ்ட் போட்டிகளில் ஆடி அதில் 48 போட்டிகளை வென்றுள்ளார். அதேபோல228 ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு அதில் 164 போட்டிகளை வென்றவர். எந்த ஒரு ஆஸ்திரேலிய கேப்டனும் செய்யாத சாதனை இது.
மேலும் 2003, 2007 உலகக் கோப்பைகளை பான்டிங் தலைமையில் ஆஸ்திரேலியா வென்றது. தற்போதும் வென்றிருந்தால் அது பான்டிங்குக்கு ஹாட்ரிக் சாதனையாக இருந்திருக்கும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications