ரோட் சேஃப்டி டி 20
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சாலை பாதுகாப்பு டி.20 தொடர் என்ற பெயரில் டி.20 தொடர் இந்தியாவில் நடத்தப்படுகிறது. இதில் கடந்த கொரோனா காரணமாக இந்த தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நிறுத்தப்பட்ட போட்டிகள் ராய்ப்பூரில் நடந்து வருகிறது. இத்தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளின் முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டு ஆடுகின்றனர்.
அதிரடி சச்சின்
இந்த தொடரில் இதுவரை 5 போட்டிகளில் ஆடியுள்ள இந்திய ஜாம்பவான்கள் அணி 4 வெற்றிகளுடன் ( 16 புள்ளி) முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் தங்களின் கடைசி லீக் போட்டியில் இந்திய ஜாம்பவான்கள் அணி, தென் ஆப்ரிக்க ஜாம்பவான்கள் அணியை நேற்று எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க ஜாம்பவான்கள் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய ஜாம்பவான்கள் அணிக்கு சேவாக் (6) ஏமாற்றினார். ஜாம்பவான் சச்சின் 37 பந்தில் 60 ரன்கள் விளாசினார். இதில் 9 பவுண்டரிகள், 1 சிக்சர் அடங்கும்.
யுவராஜ் சிக்ஸர் மழை
ஒரு புறம் சச்சின் அதிரடி காட்டி வர மற்றொரு புறம் யுவராஜ் சிங் நானும் களத்தில் இறங்குகிறேன் பார் என பந்துகளை நாளாபுறமும் சிதறடித்தார். 22 பந்துகளை எதிர்கொண்ட யுவராஜ் சிங் 52 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இதில் ஜாண்டர் டி புரூன் வீசிய 18வது ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்கள் பறக்கவிட்டார் யுவராஜ் சிங். பழைய யுவ்ராஜின் ருத்ரதாண்டவத்தை மீண்டும் பார்த்ததால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
அசத்தல் வெற்றி
இதையடுத்து இந்திய ஜாம்பவான்கள் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 204 ரன்கள் குவித்தது. கடின இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க ஜாம்பவான்கள் அணியில் தொடக்க வீரர்களை தவிர வேறு யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் மட்டும் எடுத்தது. இதன் மூலம் இந்திய ஜாம்பவான்கள் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. யுவ்ராஜுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.