சென்னை: திருச்சி அணியின் கணபதி சந்திரசேகர் 5 விக்கெட்கள் எடுத்ததுடன் 5 பந்துகளில் 26 ரன்கள் அடித்து அசத்த, சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணியை 31 ரன்களில் வென்றது ரூபி திருச்சி வாரியர்ஸ். தொடர்ந்து 2 போட்டிகளிலும் திருச்சி வென்றுள்ளது.
டிஎன்பிஎல் டி-20 போட்டித் தொடரின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடந்த ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த ரூபி திருச்சி வாரியர்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. பரத் சங்கர் 23 ரன்கள், பாபா இந்திரஜித் 53 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அடுத்து வந்த எஸ். அரவிந்த் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய எஸ். சுரேஷ் குமார் 48 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 74 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கணபதி சந்திரசேகர் 5 பந்துகளில், 2 பவுண்டரி, 3 சிக்சர் அடித்து, 26 ரன்கள் எடுத்து அசத்தினார்.
அடுத்து விளையாடிய சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ், 23 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்தது. கே.எச். கோபிநாத் 11, வி.அருண் குமார் 1, எஸ். கார்த்திக் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். திருச்சியின் கணபதி சந்திரசேகர் இந்த மூன்று விக்கெட்களையும் வீழ்த்தினார்.
அதற்கடுந்த வந்தவர்களில் பி ராகுல் 53, சசிதேவ் 30 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாயினர். இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை மட்டுமே சென்னை அணி பெற்றது. இதன் மூலம் 31 ரன்களில் திருச்சி வென்றது.
திருச்சி அணியின் கணபதி சந்திரசேகர் 5 விக்கெட்களையும், விக்னேஷ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். கணபதி சந்திரசேகர் 5 விக்கெட்களை வீழ்த்தியதுடன், 5 பந்துகளில் 26 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
ரூபி திருச்சி வாரியர்ஸ் தனது முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வென்றது. தற்போது 2வது வெற்றியைப் பெற்றுள்ளது.