பிரிஸ்பேன்: பந்தை எறிவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பாகிஸ்தான் சுழல் பந்து வீச்சாளர் சையது அஜ்மலுக்கு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் ஐசிசி அதிகாரிகள் முன்னிலையில் பவுலிங் சோதனை நடத்தப்படுகிறது.
பாகிஸ்தானின் முன்னணி சுழல்பந்து வீச்சாளர் சையது அஜ்மல், பந்தை வீசும் முறை சர்ச்சைக்குள்ளானது. அவர் பந்தை எறிவது போல உள்ளதாக கள நடுவர்கள் குற்றம்சாட்டியதால் பந்து வீச அஜ்மலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் 24ம்தேதி நடைபெறும் பவுலிங் சோதனையில் பங்கேற்க அஜ்மலுக்கு ஐசிசி அழைப்பு விடுத்துள்ளது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடரில் பங்கேற்க கொழும்பு வந்திருந்த அஜ்மல், அங்கிருந்து பிரிஸ்பேனுக்கு கிளம்பியுள்ளார்.
பவுலிங் சோதனைக்கு கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டால், 25ம்தேதி நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானுக்காக அஜ்மல் விளையாட முடியாது.
2009ம் ஆண்டு அஜ்மல் மீது இதேபோன்ற குற்றச்சாட்டு வந்தபோது ஐசிசி நடத்திய சோதனையில் தேர்ச்சி பெற்று மீண்டும் பந்து வீச்சை தொடர்ந்தார். இதேபோல மேலும் சில பாகிஸ்தான் வீரர்களும் சோதனைக்கு பிறகு பந்து வீசியுள்ளனர். பிரிஸ்பேன் சோதனை மையத்தில் 30க்கும் மேற்பட்ட முறை பந்து வீசச்செய்து அஜ்மல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்.