சென்னை அணி சாம்பியன்
முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. சென்னை பேட்ஸ்மேன் டூ பிளிசிஸ் 59 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து அணிக்கு கைகொடுத்தார். இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா தொடக்கத்தில் அதிரடியாக விளையாடி மிரட்டியது. ஆனால் வெங்கடேஷ் அவுட்டாக ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறியது. அதன்பின்னர் மளமளவென்று விக்கெட்டுகள் விழ சென்னை அணி மிகப்பெரும் வெற்றி பெற்றது.
கோப்பையுடன் போட்டோவுக்கு போஸ்
கடந்த சீசனில் முதல் சுற்றிலேயே வெளியேறி, இந்த முறை பீனிக்ஸ் பறவையாய் எழுச்சி பெற்ற தோனி படைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தது. கிரிக்கெட் ஜாம்பவான்கள் லாரா முதல் தொடங்கி பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்தனர். கோப்பையை கைப்பற்றியவுடன் சி.எஸ்.கே வீரர்கள், அணி நிர்வாகத்தினர் கோப்பையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தது சமூக வலைத்தளத்தில் வைரலானது.
சாம் கரண்
சி.எஸ்.கே வீரர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்தபோது, அணியினருடன் வீரர் சாம் கரணும் இணைந்து இருப்பது போன்ற போட்டோ வெளியானது. வழக்கமாக சென்னை அணியில் சிறப்பாக விளையாடும் சாம் கரண் இந்த முறை பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சொதப்பி விட்டார். 9 போட்டிகளில் விளையாடி வெறும் 56 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 9 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். சாம் கரண் வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்று இருந்ததை சி.எஸ்.கே ரசிகர்கள் தனியாக குறிப்பிட்டு வைரலாக்கினார்கள்.
போட்டோஷாப்
இந்த நிலையில் சி.எஸ்.கே வீரர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் சாம் கரண் கலந்து கொள்ளவில்லை என்பதும் போட்டோஷாப் மூலம் அவர் வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்று இருப்பது போல் செய்து இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. வெற்றி கொண்டாட்ட ஒரிஜினல் போட்டாவில் அணி வீரர்களுடன் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஏனெனில் இறுதிபோட்டி நடக்கும் முன்னரே சாம் கரண் தனது தாய்நாடான இங்கிலாந்து சென்று விட்டார். ஆனால் அவர் துபாயில் சி.எஸ்.கே வீரர்களுடன் போஸ் கொடுப்பதுபோல் போட்டோஷாப் மூலம் மாற்றி வைத்துள்ளனர்.