
இரட்டை சதம் அடித்தார்
ராகுல் டிராவிட் மகன் சமித் கிரிக்கெட் ஆடுகிறார் என்பதே பலருக்கும் தெரியாத ஒரு தகவல் தான். இந்த நிலையில், 14 வயதே ஆன சமித் இரட்டை சதம் அடித்து தன் தந்தையின் வழியில் தானும் செல்வதை அறிவித்து இருக்கிறார்.

அண்டர் 14 தொடர்
கர்நாடகா மாநில கிரிக்கெட் அமைப்பு நடத்திய அண்டர் 14 கிரிக்கெட் தொடரில் வைஸ் பிரெசிடென்ட் லெவன் அணிக்காக ஆடினார் சமித் டிராவிட். தர்வாத் ஜோன் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றார்.

அபார ஆட்டம்
அந்தப் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் 256 பந்துகளில் 201 ரன்கள் குவித்தார் சமித். அவரது ஆட்டத்தில் 22 ஃபோர் அடங்கும். அத்தோடு இரண்டாவது இன்னிங்க்ஸில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 94 ரன்கள் குவித்தார்.

3 விக்கெட்கள்
மேலும், பந்துவீச்சிலும் கலக்கிய அவர் 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். சமித் அட்டகாசமாக ஆடினாலும் இந்தப் போட்டி டிராவில் முடிந்தது. எனினும், சமித் பற்றிய தகவல் உடனடியாக பரவத் துவங்கியது.

150 ரன்கள் குவித்தார்
கடந்த ஆண்டு கர்நாடகா மாநில அளவில் நடைபெற்ற பள்ளிகள் அளவிலான அண்டர் 14 தொடரில் மால்யா அதிதி பள்ளி அணியில் ஆடிய சமித் ஒரு போட்டியில் 150 ரன்கள் குவித்து அசத்தினார்.

டைகர் கோப்பை ஆட்டம்
இரு ஆண்டுகளுக்கு முன் பெங்களூர் யுனைட்டெட் கிரிக்கெட் கிளப் நடத்திய டைகர் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டியில் 125 ரன்கள் குவித்து இருந்தார் சமித்.

9 வயதில் நிரூபித்தார்
அதற்கும் முன்பாக 9 வயதிலேயே அண்டர் 12 அணியில் இடம் பெற்று பள்ளிகள் அளவிலான தொடரில் 77*, 93 மற்றும் 77 என மூன்று அரைசதங்கள் அடித்து மூன்று போட்டிகளில் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார் சமித்.

டிராவிட் வழியில்..
இந்திய அணியின் தடுப்புச் சுவர் என அறியப்பட்ட ராகுல் டிராவிட் போட்டிகளில் தொடர்ந்து ரன் குவிப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார். அதே வழியில் சமித் பயணிக்கிறார். தொடர்ந்து போட்டிகளில் ரன் குவித்து தன்னை நிரூபித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











