தலைமை பயிற்சியாளர் டிராவிட்
இந்தியா-நியூசிலாந்து தொடர் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதற்குள் புதிய பயிற்சியாளர் தேர்வு செய்யப்பட்டு விடுவார் என்றும் ராகுல் டிராவிட்வ் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் பரவியது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்தபடி ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிசிசிஐ நியமித்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து தொடர்
வருகிற 17-ம் தேதி தொடங்க உள்ள இந்தியா - நியூசிலாந்து தொடரில் இருந்து ராகுல் டிராவிட் தனது பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். ''இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது ஒரு முழுமையான மரியாதை. இந்த பணி மேற்கொள்வதை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ரவி சாஸ்திரியின் கீழ் அணி சிறப்பாக செயல்பட்டது, இதேபோல் நாமும் ஒருங்கிணைந்து அணியை முன்னோக்கி செல்ல வேண்டும்'' என்று ராகுல் டிராவிட் கூறினார்.
கங்குலி கலகல
ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக மிக முக்கிய காரணம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர்(பி.சி.சி.ஐ) சவுரவ் கங்குலிதான். இந்த நிலையில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு அவரது மகனிடம் இருந்து தனக்கு வந்த போன் கால் குறித்து சவுரவ் கங்குலி நகைச்சுவையாக பேசினார். ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் பேசிய கங்குலி இது தொடர்பாக கூறியதாவது:-
'ரொம்ப கண்டிப்புடன் இருக்கார்'
டிராவிட் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு அவரது வீட்டில் இருந்து எனக்கு ஒரு போன் கால் வந்தது. பேசியது ராகுல் டிராவிட்டின் மகன். '' அங்கிள் அப்பா ரொம்ப கண்டிப்புடன் இருக்கார். அவரை அழைத்து செல்லுங்கள்'' என்று என்னிடம் தெரிவித்தான். இதை கேட்டதும் நான் சிரித்து விட்டேன். இதன்பின்பு தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டது குறித்து தெரிவிப்பதற்காக நான் டிராவிட்டுக்கு போன் செய்தேன். அவரது மகன் என்னிடம் பேசியதை குறிப்பிட்டு, 'நீங்கள் தேசிய அணியில் சேர வேண்டிய நேரம் இது' என்று டிராவிட்டிடம் நகைச்சுவையாக குறிப்பிட்டேன். இவ்வாறு சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
ஒன்றாக வளர்ந்தோம்
''நானும் டிராவிட்டும் ஒன்றாக வளர்ந்தோம், ஒரே நேரத்தில் கேரியரை ஆரம்பித்தோம், பெரும்பாலான நேரத்தை ஒன்றாக விளையாடினோம். எனவே, எங்களில் சிலருக்கு அவரை வரவேற்பதும் விரும்புவதும் எளிதாக இருந்தது'' என்றும் சவுரவ் கங்குலி மகிழ்ச்சியுடன் கூறினார். ராகுல் டிராவிட்டுக்கு சமித் டிராவிட் மற்றும் அன்வே டிராவிட் என இரண்டு மகன்கள் உள்ளனர். ராகுல் டிராவிடும், சவுரவ் கங்குலியும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.