சேவாக்கை பயமுறுத்தும் அக்தர்
சேவாக் தான் அஞ்சும் பந்துவீச்சாளர் பற்றி இப்படி கூறியுள்ளார். "நான் பயப்படும் ஒரு பந்துவீச்சாளர் இருக்கிறார் என்றால் அது ஷோயப் அக்தர் தான். அவர் எந்த பந்தை ஷூவில் அடிப்பார், எந்த பந்தை தலையில் அடிப்பார் என்றே தெரியாது. அவர் பல முறை பவுன்சர்களால் என் தலையில் தாக்கி இருக்கிறார். அதே சமயம், அவரது பந்து வீச்சை அடித்து துவைத்து சந்தோஷமும் அடைந்து இருக்கிறேன்" என்றார் சேவாக்.
அப்ரிடிக்கு கடினமான பேட்ஸ்மேன்
அப்ரிடி கூறுகையில் தான் யாருக்கும் பயந்ததில்லை, ஆனால் சேவாகுக்கு பந்து வீசுவது கடினம் என குறிப்பிட்டுள்ளார். அப்ரிடி சுழற்பந்துவீச்சாளர். சேவாக் சுழற்பந்துகளை அடித்து துவைத்து எடுத்து விடுவார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
மறக்க முடியாதது என்ன?
அப்ரிடி தன்னால் மறக்க முடியாத நிகழ்வாக 2009 டி20 உலகக்கோப்பை வெற்றியை குறிப்பிட்டுள்ளார். இலங்கை அணி, பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து எந்த நாடும் பாகிஸ்தானோடு இருதரப்பு கிரிக்கெட் தொடரில் ஆட மறுத்துவிட்டது. அந்த நேரத்தில் டி20 உலகக்கோப்பை வென்றது, தங்கள் நாட்டை உயர்த்திக் காட்ட உதவியது என கூறியுள்ளார் அப்ரிடி.
சேவாக் சொன்ன நிகழ்வுகள்
"2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பை வெற்றிகள் தான் மறக்க முடியாதது. அதிலும் 2007இல் நாங்கள் மிக இளம் அணியை வைத்திருந்தோம். நாங்கள் சிறப்பாக செயல்படுவோம், வெல்வோம் என யாரும் நினைக்கவில்லை. அதுவும் தென்னாபிரிக்காவில். அதே போல, 2011இல் ஏன் சிறப்பான வெற்றி என்றால், அதற்கு முன் உலகக்கோப்பையை நடத்திய எந்த நாடும் கோப்பையை வென்றதில்லை" என குறிப்பிட்டார் சேவாக்.