கிம்பர்லே: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருதினப் போட்டித் தொடரை இழக்கும் அபாயத்தில் இருந்து ஆண்கள் அணி தப்பியுள்ள நிலையில், மகளிர் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் விளையாட தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. விராட் கோஹ்லி தலைமையிலான ஆடவர் அணி முதல் 3 ஒருதினப் போட்டிகளிலும் வென்று 3-0 என முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் தொடர் தோல்வியில் இருந்து தப்பியது.இந்த நிலையில், முதல் ஒருதினப் போட்டியில் இந்திய மகளிர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நேற்று நடந்த இரண்டாவது ஆட்டத்தில், 178 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரையும் வென்றது.முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி 3 விக்கெட்களை மட்டும் இழந்து, 302 ரன்கள் குவித்தது. முதல் ஆட்டத்தில் 98 பந்துகளில் 84 ரன்கள் குவித்த ஓப்பனர் ஸ்மிருதி மந்தனா, நேற்றைய ஆட்டத்தில், 129 பந்துகளில் 135 ரன்கள் குவித்து ருத்ரதாண்டவம் ஆடினார். அதில் 14 பவுண்டரிகள், ஒரு சிக்சரும் அடங்கும்.ஹர்மன்பிரீத் கவுர் 55, வேதா கிருஷ்ணமூர்த்தி, 51 ரன்கள் குவித்தனர்.அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 30.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.பூணம் யாதவ் 4 விக்கெட்களை வீழ்த்தினார். தீப்தி சர்மா, ராஜேஷ்வரி கெய்க்வாட் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். தென்னாப்பிரிக்காவின் ஓப்பனர் லிஸ்ஸி லீ 73 ரன்கள் எடுத்தார்.இதன் மூலம் 178 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வென்றது.