ராஜஸ்தான் ராயல்ஸ்-இல் வார்னே
ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசடராக நியமிக்கப்பட்டுள்ளார் ஷேன் வார்னே. கடந்த ஆண்டு அந்த அணியின் ஆலோசகராக இருந்த நிலையில், இந்த ஆண்டு இந்த பதவியை பெற்றுள்ளார். பின்னர் என்டிடிவி-க்கு பேட்டி அளித்த போது தற்போது உள்ள காலத்தில் சிறந்த கேப்டன் யார் என கேட்கப்பட்டது.
கோலி சிறந்த தலைவர்
அதற்கு நேரடியாக பதில் கூறாத வார்னே கோலி சிறந்த தலைவராக இருக்கிறார் என கூறினார். அதே போல நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் இருவரும் நுட்பமான கேப்டன்கள் என தெரிவித்தார் ஷேன் வார்னே.
கொஞ்சம் கடினம்
கேப்டன்சி, நுட்பம், தலைவராக இருப்பது இதற்கிடையே வித்தியாசம் உள்ளது. நான் கோலியின் பெரிய ரசிகன். அவர் அணியை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார். ஆனால், அவர் நுட்பம் வாய்ந்தவரா என கூறுவது கடினம் என கூறினார் வார்னே.
முக்கிய பணிகளில் எப்படி?
வார்னே கோலியை சிறந்த கேப்டன் என ஒப்புக் கொள்ளாததற்கு காரணம் கடந்த காலங்களில் கோலி பந்து வீச்சாளர்களுக்கு ஓவர் ஒதுக்கும் முறை, பீல்டிங் நிறுத்துவது, ரிவ்யூ கேட்பது உள்ளிட்ட கேப்டனின் முக்கிய பணிகளில் பெரிதாக கோட்டை விட்டுள்ளார்.
அதிக மாற்றங்கள் செய்தவர்
அதே போல அணித் தேர்விலும் கோலி போல மாற்றங்கள் செய்த எந்த கேப்டனையும் நாம் காண முடியாது. அவர் ஒரு வீரரின் திறமையை வெளிக் கொண்டு வர போதிய காலம் கொடுப்பதில்லை. ஏற்கனவே, திறமையை நிரூபித்த வீரர்களை மட்டுமே அவர் பயன்படுத்தி வருகிறார்.
கோலி சிறந்த பேட்ஸ்மேன்
இந்திய அணியில் பல புதிய வீரர்களை, சிறந்த அணியை உருவாக்கிய பெருமை கங்குலி, தோனி ஆகியோரையே சாரும். கங்குலி, தோனியை விட கோலி சிறந்த பேட்ஸ்மேன் என கூறினால் கூட ஒப்புக் கொள்ளலாம். ஆனால், அவர் நிச்சயம் அவர்களை விட சிறந்த கேப்டன் இல்லை. வார்னே இதை தான் நாசூக்காக சிறந்த தலைவர் மட்டுமே என கூறி இருக்கிறாரோ!