கடந்த ஆண்டுகளில் இல்லாத காட்டுத்தீ
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டுகளில் இல்லாதவகையில் இந்த ஆண்டு பல்வேறு இடங்களை பதம்பார்த்துள்ள காட்டுத்தீக்கு இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான ஹெக்டேர்களில் உள்ள காடுகள் தீக்கிரையாகியுள்ள நிலையில், லட்சக்கணக்கான விலங்குகள், பறவைகள் உயிரிழந்துள்ளன. இதனால் ஆஸ்திரேலியா நெருக்கடியை சந்தித்துள்ளது.
நன்கொடை டென்னிஸ் போட்டி
இந்த காட்டுத்தீக்கு சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நன்கொடைகள் அளித்து வருகின்றனர். செரினா வில்லியம்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த டென்னிஸ் வீரர்கள், வீராங்கனைகள் நன்கொடை அளித்துள்ளனர். மேலும் பல வீரர்கள் பங்கேற்ற டென்னிஸ் போட்டி நடத்தப்பட்டு நன்கொடை வசூலிக்கப்பட்டது.
பாண்டிங், கில்கிறிஸ்ட் தலைமையில் அணிகள்
காட்டுத்தீக்கு நன்கொடை வசூலிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ரிக்கி பாண்டிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையில் உலகளவிலான கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று ஆடினர். ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். 10 ஓவர்களுக்கு இந்த போட்டி ஆடப்பட்டது.
|
அதிகளவில் நன்கொடை வசூலிப்பு
ரிக்கி பாண்டிங் தலைமையிலான சர்வதேச வீரர்கள் பங்கேற்ற அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட கிரிக்கெட் ஆஸ்திரேலியா, இந்த போட்டியின் மூலம் காட்டுத்தீக்கு அதிகளவில் நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் போட்டியை அடுத்து இரு அணி வீரர்களும் கைகுலுக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
|
மதிக்காத ஷேன் வாட்சன்
பாகிஸ்தான் முன்னாள் பௌலர் வாசிம் அக்ரம் சிறப்பாக பந்துவீசிய போதிலும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஷேன் வாட்சன் அவரை மதிக்காமல் அவரது பந்துகளில் சிக்ஸ்களையும் பவுண்டரிகளையும் விளாசினார். அவரது முதல் ஓவரிலேயே 17 ரன்களை அள்ளிக் கொடுத்தார் வாசிம் அக்ரம். இந்த நிகழ்வையும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ஒருநாள் தள்ளி நடந்த போட்டி
சிட்னியில் நேற்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்த இந்த போட்டி வானிலை காரணங்களால் மெல்போர்னின் ஜங்ஷன் ஓவல் மைதானத்தில் இன்று நடத்தப்பட்டது. மேலும் சிட்னியில் இருந்து மெல்போர்னில் இந்த போட்டி நடத்தப்பட்டது. முன்னாள் வீரர்களின் பங்களிப்பில், சிறப்பான அனுபவங்களை இந்த போட்டி ரசிகர்களுக்கு தந்தது.