முதல் ஒருநாள் போட்டி
நியூசிலாந்து அணியில் ஸ்டார் வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து அவுட்டாக, ஒருகட்டத்தில் 150 ரன்களையாவது எட்டுமா? என்ற சந்தேகம் எழுந்துவிட்டது. அப்போது களமிறங்கிய மைக்கேல் பிரேஸ்வெல் ஒற்றை ஆளாக நியூசிலாந்து அணியை தூக்கி நிறுத்தினார். 78 பந்துகளை சந்தித்த அவர் 12 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 140 ரன்களை விளாசினார்.
கடைசி ஓவர்
பிரேஸ்வெல்லின் ருத்ர தாண்டவத்தால், கடைசி ஓவரில் வெற்றி பெற 20 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்தது. ஆனால் 9 விக்கெட்கள் சென்றிருந்தன. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் கடைசி ஓவரை வீச வந்த ஷர்துல் தாக்கூர் முதல் பந்திலேயே சிக்ஸரை விட்டுக்கொடுத்தார். 2வது பந்து வைடாக சென்றுவிட்டது. இதனால் 5 பந்துகளில் 13 ரன்கள் தேவை என வந்தபோது 3வது பந்தை சாதுர்யமாக யார்க்கர் வீசி எல்.பி.டபள்யூ ஆக்கினார்.
கோலி தந்த யோசனை
இந்நிலையில் பிரேஸ்வெல்லை வீழ்த்த விராட் கோலி தான் திட்டம் போட்டுக்கொடுத்தார் என ஷர்துல் தாக்கூர் கூறியுள்ளார். அதில், கடைசி ஓவரை நான் வீசப்போகிறேன் என்று அறிந்தவுடனே பதற்றப்பட்டேன். அதுவும் முதல் பந்து சிக்ஸருக்கு சென்றவுடன் அழுத்தம் ஏற்பட்டது. அப்போது எனக்கு அருகில் வந்த விராட் கோலி, பிரேஸ்வெல்லை வீழ்த்துவதற்கு ஐடியா தந்தார்.
என்ன சொன்னார்?
அதில் தொடர்ச்சியாக ஷார்ட் லெந்த் பந்துகளை வீசாதே, யார்க்கர் லெந்தில் வீசு நிச்சயம் விக்கெட் கிடைக்கும் என விராட் கோலி கூறியிருந்தார். கோலி கூறியதை போன்றே அடுத்த பந்திலேயே யார்க்கர் வீசினேன், அதற்கு பலனும் கிடைத்தது என ஷர்துல் தாக்கூர் கூறியுள்ளார். இதற்காக அவரை லார்ட் ஷர்துல் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.