பஞ்சாப் - டெல்லி போட்டி
பஞ்சாப் - டெல்லி அணிகள் இடையே ஆன ரஞ்சி ட்ராபி போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. அந்தப் போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஷுப்மன் கில் இடம்பெற்றார்
பஞ்சாப் அணியில் இந்திய அணியில் அவ்வப்போது இடம் பெற்று வரும் இளம் வீரர் ஷுப்மன் கில் ஆடினார். அவர் இந்தியா ஏ அணிக்கும் கேப்டனாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேட்ச் மற்றும் அவுட்
பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்த போது, ஷுப்மன் கில் 10 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் பிடிக்கப்பட்டார். அப்போது கள அம்பயர் அதற்கு அவுட் கொடுத்தார்.
ஷுப்மன் கில் வாக்குவாதம்
ஆனால், பந்து பேட்டில் படவில்லை எனக் கருதிய ஷுப்மன் கில் ஆடுகளத்தை விட்டு வெளியேற மறுத்தார். மேலும், அம்பயருடன் அவுட் இல்லை என வாக்குவாதம் செய்தார்.
தீர்ப்பு மாற்றம்
முதலில் வந்த தகவல்களில் ஷுப்மன் கில் அம்பயரை திட்டினார் என்றும் கூட கூறப்பட்டது. கில் தொடர்ந்து வாக்குவாதம் செய்த நிலையில், இரு அம்பயர்களும் பேசிய பின் அவுட் தீர்ப்பை மாற்றினர்.
டெல்லி அணி எதிர்ப்பு
அதைக் கண்ட டெல்லி அணி கடும் கோபம் கொண்டது. டெல்லி அணியின் கேப்டன் நிதிஷ் ராணா, தீர்ப்பை ஏன் மாற்றினீர்கள் என கேட்டு அம்பயர்களுடன் பேசினார். அதனால், போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
10 நிமிடங்கள் பாதிப்பு
இந்த சம்பவங்களால் போட்டி சுமார் 10 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. பின்னர், மேட்ச் ரெப்ரீ தலையிட்டு டெல்லி அணியை சமாதானம் செய்து போட்டியை தொடரச் செய்தார்.
போட்டி டிரா
ஷுப்மன் கில் 10 ரன்களில் அம்பயர் தீர்ப்பை மாற்றி தப்பித்தாலும், பின் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டி டிராவில் முடிந்ததால், இந்த அம்பயர் தீர்ப்பு மாற்றம் குறித்த சர்ச்சை அடங்கியது.
தண்டனை அறிவித்தார்
போட்டியின் முடிவில் அம்பயர் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த குற்றத்திற்காக ஷுப்மன் கில்லிற்கு போட்டி சம்பளம் முழுவதும் தண்டனையாக அறிவித்தார் மேட்ச் ரெப்ரீ. இந்த விவகாரத்தை அடுத்து, ஷுப்மன் கில்-ஐ இந்தியா ஏ அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.