
ஆவேசப்பட்ட ரெய்னா
இந்த நிலையில் துபாய் சென்றிருந்த சுரேஷ் ரெய்னா, ஐபிஎஎல் போட்டிகளிலிருந்து விலகி நாடு திரும்பினார். இந்த சம்பவம் குறித்து நேற்று கோபாவேசத்துடன் ட்வீட் போட்டிருந்தார். மிகக் கொடூரமாக எனது மாமாவைக் கொன்று விட்டனர். அவரது மகனும் இறந்து விட்டார். எனது அத்தையும் மற்றவர்களும் உயிருக்குப் போராடி வருகின்றனர் என்று அவர் கூறியிருந்தார்.

ஒருவரையும் விடக் கூடாது
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட யாரையும் விடக் கூடாது. கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வருக்கும், காவல்துறைக்கும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் சிறப்பு புலனாய்வுப் படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பஞ்சாப் முதல்வர் உத்தரவு
இதுதொடர்பாக அமரிந்தர் சிங் வெளியிட்டுள்ள தகவலில், சிறப்பு புலனாய்வுப் படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. .விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர். சுரேஷ் ரெய்னா, நானும், எனது அதிகாரிகளும் உங்களது அத்தை குடும்பத்தினரை சந்தித்தோம். குற்றம் செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர் என அவர்களுக்கு உறுதி அளித்துள்ளோம் என்று கூறியுள்ளார் முதல்வர்.

கொள்ளைக் கும்பல் அட்டகாசம்
இதற்கிடையே, இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கொள்ளையர்கள் என்று கூறப்படுகிறது. காலே கச்சேவாலா என்ற கும்பலைச் சேர்ந்த கொள்ளையர்கள் இவர்கள் என்று கூறப்படுகிறது. மொத்தம் 3 அல்லது 4 பேர் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் வீடுகளில் தூங்கிக் கொண்டிருப்போரைத் தாக்கி கொள்ளையடிப்பது வழக்கமாகும்.

அத்தை கவலைக்கிடம்.. மகன் தேறினார்
இதற்கிடையே, சிகிச்சை பெற்று வரும் ரெய்னாவின் அத்தை ஆஷா தேவி தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அவரது இன்னொரு மகன் 28 வயது அபின் தற்போது அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் மட்டுமல்லாமல் பஞ்சாபிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











