கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கத்தில் கலகக் குரல்!

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தலைவராக அனில் கும்ப்ளே, செயலராக ஹவகல் ஸ்ரீநாத் ஆகியோர் இருக்கின்றனர். அண்மையில்தான் 8 நாட்கள் 75வது ஆண்டு விழா நிகழ்ச்சியை நடத்தியது கர்நாடகா கிரிக்கெட் சங்கம்.
இந்த நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் முன்னாள், இந்நாள் வீரர்கள் கலந்து கொண்டனர். தற்போது கலகக் குரல் எழுப்பியிருப்பவர் சங்கத்தின் முன்னாள் செயலர் பிரிஜேஸ் படேல்.
இது பற்றி அவர் கூறுகையில், 75வது ஆண்டு விழாவுக்காக ரூ4 கோடி செலவு செய்தது தொடர்பாக சங்கத்தின் நிர்வாகக் குழுவுடன் கலந்து ஆலோசிக்கப்படவில்லை. அத்துடன் சங்க விழாவுக்கு முறைப்படியும் தாம் அழைக்கப்படவில்லை. இப்படி பெருந்தொகையான பணம் செலவழிக்கப்படுவதற்கு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தின் ஒப்புதல் அவசியம் என்றார்.
இதேபோல் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரும் மைசூர் மகாராஜா குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீகண்டாதத்த நரசிம்மராஜ உடையார், 2009ஆம் ஆண்டே 75வது ஆண்டு விழா நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 4 ஆண்டுகள் கழித்து இந்த விழா நடத்தப்படுகிறது. இதற்குக் காரணம் விரைவில் நடைபெற உள்ள சங்கத் தேர்தல்தான் என்றார்.
மேலும் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் சர் ரிச்சர்ட் ஹெட்லியை 10 ஆயிரம் டாலர் செலவழித்து ஏன் அழைத்துவர வேண்டும் என்றும் சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இருப்பினும் எந்த ஒரு புகாருக்கும் பதிலளிக்கப் போவதில்லை என்று சங்கத்தின் செயலர் ஸ்ரீநாத் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications