இனி தெருவுல கூட விளையாட முடியாது போலயே.. புலம்பலில் ஸ்ரீசாந்த்!
டெல்லி: சர்வதேச, முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டதால், வேறு ஏதாவது நாட்டுக்கு விளையாடுவேன் என்று ஸ்ரீசாந்த் கொந்தளிக்க, எங்கேயும் விளையாட முடியாது என்று பிசிசிஐ கூறியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், 2013ல் நடந்த ஐபிஎல் போட்டியின்போது, மேட்ச்-பிக்சிங் செய்ததாக புகார் எழுந்தது. அதையடுத்து போட்டிகளில் விளையாடுவதற்கு அவருக்கு பிசிசிஐ தடை விதித்தது.
இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில், கேரளா ஐகோர்ட் நீதிபதி, தடையை விலக்கும்படி உத்தரவிட்டார். பிசிசிஐ தொடர்ந்த வழக்கில், தடை செல்லும் என்று கேரளா ஐகோர்ட் பெஞ்ச் கூறியுள்ளது.

கைக்கு எட்டியும், வாய்க்கு எட்டவில்லை
சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்திருந்த, 34 வயதாகும் ஸ்ரீசாந்த், கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லையே என்று விரக்தி அடைந்தார்.

40 வயது வரை விளையாடுவேன்
இந்தியாவுக்காக விளையாடுவதே என்னுடைய லட்சியம். 40 வயது வரை விளையாட முடியும். இந்தியாவுக்காக விளையாட முடியாத நிலையில், வேறு ஒரு நாட்டுக்காக விளையாடுவேன் என்று குரல் கொடுத்தார். கண்ணா, ஒரு நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்தால், ஐசிசி சட்டப்படி எந்த நாட்டுக்கும் விளையாட முடியாது என்று பிசிசிஐ கூறியுள்ளது.

இனி விளையாடவே முடியாது
பா.ஜ.,வில் இணைந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீசாந்த், தோல்வியடைந்தார். இனி இந்தியா மட்டுமல்ல எந்த நாட்டுக்கும் விளையாட முடியாத நிலையில் உள்ளார்.

குழம்பும் ஸ்ரீசாந்த்
மெர்சல் படத்துக்கு ஏன் இவ்வளவு பிரச்னை என்று விஜய் தரப்பு ஆச்சரியமாக இருப்பது போல, தெருவிலாவது விளையாடலாமா அல்லது அதற்கும் தடை இருக்குமா என்று தெரியாமல் ஸ்ரீசாந்த் புலம்பி வருகிறார்.


Click it and Unblock the Notifications