126 ரன்களுக்கு சுருண்ட தென்னாபிரிக்கா...... ஒரே நாளில் 13 விக்கெட்கள் சரிவு..
காலே: இலங்கையில் நடந்து வரும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், தென்னாபிரிக்கா 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது.
தென்னாபிரிக்கா முதல் நாள் இறுதியில் 1 விக்கெட் இழந்து, 4 ரன்கள் எடுத்து இருந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது முதல் விக்கெட்களை இழக்கத் தொடங்கிய அந்த அணி, 54.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாபிரிக்கா அணியின் கேப்டன் பாப் டு ப்ளேசிஸ் 49 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் இருபது ரன்களை கூட தாண்டவில்லை.

தில்ருவன் பெரேராவின் சுழலில் 4 விக்கெட்கள் கிடைத்தது. சுரங்கா லக்மல் 3, ரங்கனா ஹெராத் 2 மற்றும் சண்டகன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இலங்கை இந்த இன்னிங்க்சில் நான்கு பந்து வீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தி இருந்தது.
தொடர்ந்து அடுத்த இன்னிங்க்சை ஆட வந்த இலங்கை அணியின் குணதிலகா 17 ரன்களுக்கு கேஷவ் மகராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டீ சில்வா 9 ரன்கள் மற்றும் மென்டிஸ் பூஜ்யத்தோடு கேஷவ் மகராஜின் சுழலில் சிக்கி நடையைக் கட்டினர்.
முதல் இன்னிங்க்சில் சிறப்பாக பேட் செய்து 158 ரன்கள் குவித்த கருணாரத்னே, இரண்டாவது இன்னிங்க்சில் அதிரடியாக ஆடி 80 பந்துகளில், 7 பௌண்டரியுடன் 60 ரன்கள் எடுத்து ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். தென்னாபிரிக்காவின் கேஷவ் மகராஜ் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்கள் எடுத்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது.
தற்போது, 272 ரன்கள் முன்னிலையில் உள்ள இலங்கை நாளை மேலும் 100 முதல் 150 ரன்கள் வரை எடுத்தால், தென்னாபிரிக்காவுக்கு கடினமான இலக்கை நிர்ணயிக்க முடியும். இந்த டெஸ்டின் முதல் நாள் 11 விக்கெட்களும், இரண்டாம் நாள் 13 விக்கெட்களும் விழுந்துள்ள நிலையில், தென்னாபிரிக்கா வெல்வது கடினம் என கருதப்படுகிறது.
Story first published: Saturday, July 14, 2018, 9:53 [IST]
Other articles published on Jul 14, 2018


Click it and Unblock the Notifications