
தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்
இந்திய அணியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக வலம்வந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், இந்திய அணிக்காக 26 டெஸ்ட்கள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 32 டி20 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு உலக கோப்பை தொடரில் இவர் இடம்பெற்றிருந்த நிலையில், தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை இவர் தரத்தவறியதை அடுத்து, இந்திய அணியில் விளையாட இவர் தேர்வாகவில்லை.

டி20 உலக கோப்பையில் சான்ஸ்
15 ஆண்டுகள் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடிவரும் தினேஷ் கார்த்திக், தற்போது டி20 உலக கோப்பை தொடருக்காக தன்னை தேர்வாளர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமீபத்தில் டி20 வடிவத்தில் தான் சிறப்பாக விளையாடி வருவதாகவும், உள்ளூர் போட்டிகளிலும் சிறந்து விளங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

டி20 சிறப்பாக உள்ளது.
கடந்த உலக கோப்பை தொடரில் திட்டமிட்டபடி தான் சிறப்பான விளையாட்டை தரத்தவறியதை ஒப்புக் கொண்டுள்ள தினேஷ் கார்த்திக், ஆனால் தற்போது டி20 உலக கோப்பை தொடரில் தனக்கு வாய்ப்பளிக்கப்பட்டால், தான் மிகவும் சிறப்பாக விளையாடி, மீண்டும் இந்திய அணியில் ஒரு நிலையான இடத்தை பிடிப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

ஆவல் குறையவில்லை
இந்திய அணியிலிருந்து தான் நீக்கப்பட்டது தனக்கு மன வருத்தத்தை அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் இந்திய அணியில் இடம்பெற்று நாட்டிற்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்ற தன்னுடைய ஆவல், சிறிதும் குறையவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் நிறை குறைகள் அதிகமாக இருப்பதாகவும் அதை கடந்துவரவே தான் விரும்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தினேஷ் கார்த்திக் வருத்தம்
கொரோனா பாதிப்பால் ஐபிஎல் தொடர் காலவரையன்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கேகேஆர் அணியின் கேப்டனாக உள்ள தினேஷ் கார்த்திக், இதுகுறித்தும் வருத்தம் தெரிவித்துள்ளார். ஐபிஎல் மூலமாக இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும் என்ற அவரது கனவு தற்போது தகர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











