சிஎஸ்கே நீக்கினால், அது அவங்க சாய்ஸ்.. என்னால் ஒன்னும் பண்ண முடியாது.. சாதனை படைத்த ஜெகதீசன் கருத்து
சென்னை : விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் தமிழக கிரிக்கெட் அணிக்காக களம் இறங்கிய நாராயன் ஜெகதீசன் 277 ரன்களை குவித்து உலக சாதனை படைத்தார்.
இதன் மூலம் தமிழ்நாடு அணி லிஸ்ட் ஏ ஒருநாள் கிரிக்கெட்டில் உலக அளவில் 500 ரகளை கடந்த முதல் அணி என்ற பெருமையை பெற்றது.
மேலும் முதல் விக்கெட்டுக்கு 416 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஜெகதீசன் சாய் சுதர்சன் ஜோடி புதிய உலக சாதனை படைத்தது.

குறிக்கோள்
இதன் மூலம் அருணாச்சல பிரதேசம் அணியை 435 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி வீழ்த்தி உலக சாதனை படைத்தது. இது குறித்து பேசிய ஜெகதீசன், இந்த சாதனையை படைத்தது உண்மையிலே மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய குறிக்கோள் இந்த ஆட்டத்தில் மட்டுமல்ல அனைத்து ஆட்டங்களிலும் முழுமையாக 50 ஓவர் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதுதான்.

உடல் தகுதி
எந்த அணிக்கு எதிராக விளையாடுவோம் என்பது முக்கியமல்ல. என்னை பொறுத்தவரை நான் ஒரே ஒரு விஷயத்தில் தான் குறியாக இருக்கிறேன். அது போட்டி முழுவதும் பேட்டிங் செய்ய வேண்டும். என்னுடைய பேட்டிங் தொடர்பாக கடின பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். விக்கெட் கீப்பிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறேன். என்னுடைய உடல் தகுதியை மேம்படுத்தி வருகிறேன்.

கடினமான சதம் எது?
நான் ரன்கள் அடிக்கும் போதும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஹரியானாவிக்கு எதிராக சதம் அடித்ததை தான் நான் மிகவும் கடினமானது என நினைக்கிறேன். ஏனென்றால் ஆட்டத்தில் 40வது ஒவர் வரை பந்து ஸ்விங் ஆனது. ஹரியானா பந்துவீச்சும் பலமாக இருந்தது. அவர்களுக்கு எதிராக சதம் அடித்தது தான் கடினமானது என கருதுகிறேன். நான் சாதனைக்காக விளையாடவில்லை. சொல்லப்போனால் இந்த சாதனை குறித்தும் நான் நினைக்கவே இல்லை.

சிஎஸ்கே குறித்து பதில்
எப்போதும் போல் அன்றைய ஆட்டத்தில் நான் விளையாடினேன். 50 ஓவர் பேட்டிங் செய்து, 50 ஓவர் கீப்பிங் செய்யும்போது நிச்சயம் என் உடல் தகுதி மேம்பட்டுள்ளது என நான் நினைக்கிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து நான் விடுவிக்கப்பட்டது என்னுடைய சாய்ஸ் கிடையாது. அது அணி நிர்வாகத்தின் விருப்பம் அது. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது எனது கையில் இல்லை. நான் எனது கையில் என்ன இருக்கிறதோ அதனை மட்டும் தான் செய்ய முடியும் என்று ஜெகதீசன் பதில் அளித்தார்.


Click it and Unblock the Notifications