தொடர் வெற்றிக்காக இந்திய அணிகள் வெயிட்டிங்!
Recommended Video

டெல்லி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 போட்டித் தொடரில் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. தொடரை வெல்வதற்காக கடைசி ஆட்டம் வரை காத்திருப்பதில் இரு அணிகளுக்கும் இடையே ஒற்றுமை உள்ளது.
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ளன. ஆடவர் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதே நேரத்தில் 6 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் 5-1 என, முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் தொடரை வென்றது.
மறுபக்கம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என்று வென்றுள்ளது. அதற்கடுத்து 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 3 போட்டிகள் முடிவில் 2-1 என முன்னிலையில் இருந்தது.

இரு அணிகளுக்கும் வாய்ப்பு
ஆடவர் அணி முதல் டி-20 போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்த நிலையில், நேற்று ஆடவர் அணி 2வது டி-20 போட்டியிலும், மகளிர் அணி 4வது டி-20 போட்டியிலும் விளையாடின. இந்தப் போட்டியில் வென்றால் தொடரை வெல்லும் வாய்ப்பு இரு அணிகளுக்கும் இருந்தது.

மகளிர் அணிக்கு சோகம்
மகளிர் பிரிவில் நான்காவது டி-20 போட்டி நேற்று சென்சூரியனில் நடந்தது. டாஸை வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆட வந்த தென்னாப்பிரிக்கா அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 130 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் மழை குறுக்கிட, போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தொடர் வெற்றிக்கு கடைசி வாய்ப்பு
அதன்படி இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. வரும், 24ம் தேதி இருவருக்கும் கடைசி போட்டி நடக்கிறது. அதில் வெற்றி பெற்று தொடரை வெல்வதற்கு இந்திய மகளிர் தயாராக உள்ளனர். குறைந்தபட்சம் தொடர் தோல்வியில் இருந்து மகளிர் அணி தப்பியுள்ளது.

சம நிலையில் ஆடவர்
ஆடவர் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 1-1 என இரு அணிகளும் சம நிலையில் உள்ளன. ஆடவர் அணி, 24ம் தேதி நடக்கும் கடைசி போட்டியில் வென்றால் தொடரை வெல்ல முடியும். தொடரை இழக்காமல் தப்பிக்க வேண்டிய சூழ்நிலையில் கோஹ்லி அணி உள்ளது.


Click it and Unblock the Notifications