மும்பை : தலைமை தேர்வாளர் மற்றும் தேர்வாளர் ஒருவரை தேர்வு செய்ய மும்பையில் நேற்று கூடிய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவினர் 5 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்துள்ளனர்.
தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் மற்றும் தேர்வாளர் ககன் கோடா ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளதையடுத்து புதிய தேர்வாளர்களை தேர்ந்தெடுக்கும் பணி துவங்கியுள்ளது. இந்நிலையில் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டுள்ள ஐந்து பேருக்கும் இன்று நேர்காணல் நடைபெறவுள்ளது.
இந்த 5 பேர் கொண்ட பட்டியலில் முன்னாள் வீரர்கள் சிவராமகிருஷ்ணன், வெங்கடேஷ் பிரசாத், ராஜேஷ் சவுஹான், ஹர்விந்தர் சிங், சுனில் ஜோஷி உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் மற்றும் தேர்வாளர் ககன் கோடா ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து புதிய தேர்வாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் கிரிக்கெட் ஆலோசனை குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில்தான் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவினர் மதன் லால், ஆர்பி சிங் மற்றும் சுலக்ஷனா நாயக் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் மும்பையில் நேற்று இவர்கள் முதல்முறையாக ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் புதிய தேர்வாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியின் முதல்கட்டமாக 44 விண்ணப்பங்களில் இருந்து 5 பேர் கொண்ட பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிவராம கிருஷ்ணன், வெங்கடேஷ் பிரசாத், ராஜேஷ் சவுஹான், ஹர்விந்தர் சிங் மற்றும் சுனில் ஜோஷி ஆகிய ஐவருக்கும் நேர்காணல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேர்காணல் காலை 11 மணியளவில் துவங்கவுள்ளது.
இந்நிலையில் தலைமை தேர்வாளர் பணிக்கு சிவராமகிருஷ்ணன், வெங்கடேஷ் பிரசாத் மற்றும் சுனில் ஜோஷி ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் ககன் கோடா பதவிக்கு ஹர்விந்தர் சிங் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னாள் வீரர் சிவராமகிருஷ்ணனின் விண்ணப்பம் மாயமானதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் நேர்காணல் வரை வந்துள்ளார்.
புதிய தேர்வாளர்களுக்கான இந்த தேர்வில் முன்னாள் வீரர்கள் அஜித் அகர்கர் மற்றும் நயான் மோங்கியா ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இருந்தன. ஆனால் அவர்கள் நேர்காணலுக்குகூட தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், அடுத்துள்ள 3 உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடையும்போது அகர்கரின் பெயர் பரிசீலிக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதனிடையே இன்று அல்லது நாளைக்குள் புதிய தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய தேர்வுக்குழு உறுப்பினர்கள், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இந்தியா மோதவுள்ள சர்வதேச ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளன. இந்த தொடரின் முதல் போட்டி வரும் 12ம் தேதி தர்மசாலாவில் துவங்கவுள்ளது.