துவக்க வீரர் மேத்யூ வேட்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக மேத்யூ வேட் அணியின் துவக்க வீரராக களமிறங்கி விளையாடினார்.
அணியின் வெற்றிக்கு காரணம்
இந்த இரு போட்டிகளிலும் இந்திய பேட்ஸ்மேன்களை காட்டிலும் பௌலர்கள் சிறப்பாக பந்து வீசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர். குறிப்பாக இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி 195 மற்றும் 200 ரன்களில் இந்திய பௌலர்கள் அவர்களை சுருட்டினர்.
மேத்யூ வேட் பாராட்டு
இந்நிலையில் கடந்த இரு போட்டிகளில் இந்திய பௌலர்கள் சிறப்பாக பந்து வீசியதாகவும் ஸ்பின்னர்கள் ரவி அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடியை கொடுத்ததாகவும் ஆஸ்திரேலிய துவக்க வீரர் மேத்யூ வேட் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுசாக்னேவிற்கு அவர்கள் மிகுந்த டப் கொடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
கடுமையை எதிர்பார்க்கவில்லை
இந்த போட்டியில் புதிதாக களமிறங்கிய முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சிறப்பு சேர்த்தனர். இந்நிலையில் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் சிறப்பாக பந்து வீசியதாகவும் குறிப்பாக இரண்டாவது போட்டியில் அவர்களின் பந்துவீச்சு இவ்வளவு கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் வேட் கூறினார்.
ஸ்பின் இரட்டையர்கள்
அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரின் பௌலிங்கை இதற்கு முன்பாகவும் ஸ்டீவ் ஸ்மித் பல முறை எதிர்கொண்டுள்ளதாகவும ஆனால் தற்போது அவர்கள் இருவரும் மிகவும் கடுமையான ஸ்பின் இரட்டையர்களாக மாறியுள்ளதாகவும் அவர்களை சமாளிக்க வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்றம் வேட் மேலும் கூறினார்.