அந்த சந்தேகம்
இந்திய அணியில் தற்போது பகுதி நேர பந்துவீச்சாளராக வலம் வருகிறார் கேதார் ஜாதவ். ஆனால், அவரது உள்ளூர் போட்டி ரெக்கார்டை எடுத்துப் பார்த்தால் அவர் அதிகமாக பந்து வீசவில்லை என்பது தெரியும். அப்புறம் எப்படி இவரை ஆல் - ரவுண்டர் என கூறுகிறார்கள் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழும்.
அதிரடி கட்டளை
கடந்த 2016ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா ஒருநாள் தொடரில் ஆடியது. அந்த தொடரில் தரம்சாலா மைதானத்தில் நடக்க இருந்த போட்டிக்கு முன்னதாக கேப்டன் தோனி, கேதார் ஜாதவ்வுக்கு ஒரு அதிரடி கட்டளை இட்டார்.
ஆஃப் ஸ்பின் பயிற்சி
நாளைய போட்டியில் உன்னிடம் இருந்து சில ஓவர்கள் வேண்டும் என தோனி, ஜாதவ்விடம் கூறி இருக்கிறார். அதை அடுத்து ஜாதவ் ஆஃப் ஸ்பின் பந்து வீச்சை பயிற்சி செய்தார். ஆனால், பகுதி நேர பந்துவீச்சாளர்கள் ஆஃப்-ஸ்பின் வீசினால் பேட்ஸ்மேன்களுக்கு கொண்டாட்டம் தான் என்பதை அப்போது தான் அவர் தெரிந்து கொண்டார்.
அகலக் கையுடன் பந்துவீச்சு
வலைப் பயிற்சியில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஜாதவ்வின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினர். இதை அடுத்து, கையை அகலமாக வைத்துக் கொண்டு, உயரே வைத்து பந்து வீசாமல், அகலக் கையிலேயே பந்தை வீசினார். முதல் பந்திலேயே பலன் கிடைத்தது.
எல்பிடபுள்யூ
அமித் மிஸ்ரா அப்போது வலைப் பயிற்சியில் பேட்டிங் செய்து வந்தார். அவர் அகலமாக பந்து வீசியதால், எப்படியும் பந்து வைடாக செல்லும் என எண்ணி பந்தை அடிக்காமல் விட்டு விட்டார். ஆனால், பந்து அவரது காலில் பட்டது. அதாவது அவர் எல்பிடபுள்யூ ஆனார்.
அமித் மிஸ்ரா வாதம்
ஆனால், சுழற் பந்துவீச்சாளரான அமித் மிஸ்ரா அது அனுமதிக்கப்பட்ட பந்துவீச்சு அல்ல, ஜாதவ் பந்தை எறிவதாக கூறி வாதிட்டுள்ளார். இதை அடுத்து இந்த பஞ்சாயத்து பயிற்சியாளரும், சுழற் பந்துவீச்சில் ஜாம்பவானும் ஆன அனில் கும்ப்ளேவிடம் சென்றது.
அனில் கும்ப்ளே என்ன சொன்னார்?
அனில் கும்ப்ளே அது ஏற்றுக் கொள்ளப்பட்ட பந்துவீச்சு தான். தோள்பட்டைக்கு மேலே கை இருக்கும் பட்சத்தில் அது அனுமதிக்கப்பட்ட பந்து வீச்சு தான் என கூறி ஜாதவ் பந்துவீச்சு முறைக்கு ஒப்புதல் வழங்கி உள்ளார். அடுத்த நாள் போட்டியில் ஜாதவ் அதே பாணியில் தான் பந்து வீசினார்.
இரண்டு விக்கெட்கள் எடுத்தார்
அந்தப் போட்டியில் மூன்றே ஓவர்கள் மட்டும் வீசி, இரண்டு விக்கெட்கள் வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் கேதார் ஜாதவ். அன்று முதல் இந்திய அணியின் பகுதி நேர சுழற் பந்துவீச்சாளராக மாறினார். 73 ஒருநாள் போட்டிகளில் 27 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார் கேதார் ஜாதவ்.
உருவாக்கிய தோனி, கும்ப்ளே
இப்படித்தான் ஒரே நாளில் ஒரு சர்வதேச போட்டிகளில் பந்து வீச ஒரு பகுதி நேர பந்துவீச்சாளரரை தோனியும், அனில் கும்ப்ளேவும் உருவாக்கி உள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் கங்குலி காலத்திலும் நிறைய நடந்தது உண்டு. ஆனால், தற்சமயம், இந்திய அணியில் உள்ளூர் போட்டிகளில் தங்களை நிரூபித்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகிறது.